முகம்மது அலியின் இறுதிச் சடங்கு.... பல ஆயிரம் பேர் கண்ணீர் அஞ்சலி!
லூயிஸ்வில்லி, கெண்டகி: அமெரிக்காவின் கெண்டகி மாகாணத்தில் உள்ள லூயிஸ்வில்லி நகரில் மறைந்த குத்துச் சண்டை மாமேதை முகம்மது அலியின் இறுதிச் சடங்கு இன்று நடைபெற்றது. பல ஆயிரம் பேர் இதில் கலந்து கொண்டு அலிக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
முன்னதாக பல ஆயியர் பேர் குவிந்ததால் லூயிஸ்வில்லி நகரே ஸ்தம்பித்தது. தெருக்கள் தோறும் மக்கள் கூட்டமாக காணப்பட்டது. ஜானசா எனப்படும் இறுதித் தொழுகையில் பலரும் கலந்து கொண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
ஜானசா தொழுகைக்குப் பின்னர் அலியின் உடல் கேவ் ஹில் கல்லறைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.
துருக்கி அதிபர் தய்யீப் எர்டோகன், ஜோர்டான் மன்னர் அப்துல்லா, அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் உள்ளிட்ட பிரபலங்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.
74 வயதான அலி சுவாசப் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் கடந்த 4ம் தேதி மரணமடைந்தார். குத்துச் சண்டை உலகில் பல சாதனைகளைப் படைத்வதர் அலி. முடி சூடா மன்னராக திகழ்ந்தவர். 56 வெற்றிகளையும், 5 தோல்விகளையும் கண்ட சாதனையாளர்.
பர்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட முகம்மது அலி தனது இறுதி மூச்சை நிறுத்திய தகவல் உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அலியின் உடல் சொந்த ஊரான லூயிஸ்வில்லிக்குக் கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வந்தனர். இன்று இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.