"எபோலா வைரஸ் வெடிகுண்டு".. அல் கொய்தா தயாரிக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை
லண்டன்: மேற்கு ஆப்பிரிக்காவில் வேகமாக பரவி வரும் எபோலா வைரஸை அல் கொய்தா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் குண்டு தயாரிக்க பயன்படுத்தலாம் என்று மனிதவியல் நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
மேற்கு ஆப்பிரிக்காவில் நூற்றுக்கணக்கானோரின் உயிரை குடித்துள்ளது எபோலா வைரஸ். மேலும் பலர் அந்த வைரஸால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மனிதவியல் துறை பேராசிரியராக இருக்கும் டாக்டர் பீட்டர் வால்ஷ் ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அல் கொய்தா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் எபோலா வைரஸை பவுடருடன் கலந்து வெடிகுண்டுகள் செய்து அவற்றை இங்கிலாந்தில் உள்ள முக்கிய நகரங்களில் வெடிக்கச் செய்யக்கூடும் என்று வால்ஷ் எச்சரித்துள்ளார்.
உலக அளவில் எபோலா வைரஸ் ஆய்வகங்களில் பாதுகாப்பான சூழலில் வைக்கப்பட்டுள்ளதால் அது தீவிரவாதிகளுக்கு கிடைக்க வாய்ப்பு இல்லை. அதனால் தீவிரவாதிகள் மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து அந்த வைரஸை பெறலாம் என்று கூறப்படுகிறது.
வன விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் எபோலா வைரஸ் தாக்கி மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினியா, சியர்ரா லியோன், நைஜீரியா மற்றும் லைபீரியாவில் இதுவரை 800க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.