ரஷ்ய ஆதரவு படை சுட்டு வீழ்த்திய உக்ரைன் உளவு விமானம்: பாராசூட்டில் தப்பிக்கும் வீரர்கள்- வீடியோ
மாஸ்கோ: உக்ரைன் உளவு விமானம் ஒன்றை ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் கடந்த மாதம் சுட்டுக்கொன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிக உயரத்தில் பறக்கும் விமானங்களை குறிதவறாமல் ஏவுகணையால், சுட்டு வீழ்த்தக்கூடிய தொழில்நுட்பம் ரஷ்ய ராணுவத்திடம் இருப்பதால், அவர்களின் ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகளால் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

இரு தரப்பும் கைவிரிப்பு
உக்ரைனில் நேற்று நள்ளிரவு மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட மர்மம் இன்னும் விலகவில்லை. ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளும், உக்ரைன் அரசும் தாங்கள் இந்த செயலை செய்யவில்லை என்று கைவிரிவித்துவிட்டன. இதுகுறித்து சர்வதேச விசாரணை தேவை என்று உலக நாடுகள் கோரிக்கைவிடுத்துவருகின்றன.

ஏற்கனவே நடந்துள்ளது
இந்நிலையில், இதேபோன்ற ஒரு சம்பவம் ஜூன் 7ம்தேதி உக்ரைனில் நடந்துள்ளது வீடியோ ஆதாரங்களுடன் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. அப்போது சுட்டு வீழ்த்தப்பட்டது உக்ரைன் நாட்டின் உளவு விமானம் என்பதால் அப்போது அது பெரிய அளவுக்கு கவனத்தை ஈர்க்கவில்லை. ஆனால் மலேசிய விமானம் வீழ்த்தப்பட்டுள்ள நிலையில் அந்த மர்ம முடிச்சை அவிழ்க்க கடந்த மாத சம்பவம் உதவியாக இருக்கும்.

தீபிடித்தபடி கீழே விழும் விமானம்
உக்ரைன் நாட்டின் உளவு விமானம் ஏஎன்-30பி, கடந்த மாதம் 7ம்தேதி, ரஷ்ய கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலுள்ள சுலோவியான்ஸ்க் பகுதிக்கு மேலே உளவு பார்க்க பறந்து கொண்டிருந்தது. அப்போது ஏவுகணையை ஏவிய பிரிவினைவாதிகள் அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தினர். அந்த விமானம் தீ பிடித்தபடி, கீழே விழுவது வீடியோவாக எடுக்கப்பட்டு அது சமூக வலைத்தளங்களிலும் பரவியுள்ளது.

5 பேர் சாவு
சுமார் 1 நிமிடம் 19 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில் விமானம் தீபிடித்தபடி கீழே பாயும் பயங்கர காட்சி இடம் பிடித்துள்ளது. இந்த சம்பவத்தை உக்ரைன் அரசும் உறுதி செய்துள்ளது. இந்த சம்பவத்தில் விமானத்தில் இருந்த எட்டு பேரில் 3 பேர் மட்டும் பாரசூட் உதவியால் உயிர் தப்பியுள்ளனர். எஞ்சிய 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ரஷ்ய ஏவுகணையால்தான் முடியும்
இதுகுறித்து உக்ரைன் அரசு கூறுகையில், ரஷ்யாவிடம் உள்ள 'வெர்பா' வகை ஏவுகணையால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. விமானம் 4050 மீட்டர் உயரத்தில் பறந்தபோது, ஏவுகணையால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இந்த ஏவுகணைகள் ரஷ்யாவை தவிர வேறு நாட்டிடம் கிடையாது. அந்த நாடும் வேறு எந்த நாட்டுக்கும் இதை விற்பனை செய்தது கிடையாது என்று கூறியிருந்தது.
இப்போதும் ரஷ்யாதான்
இந்த சம்பவத்தை வைத்து, ரஷ்யாவால் ஆயுத உதவி பெற்ற, பிரிவினைவாதிகள்தான் மலேசிய விமானம் மீது தாக்குதலை நடத்தியிருக்க வேண்டும் என்று உக்ரைன் உறுதியாக கூறுகிறது.












Click it and Unblock the Notifications