பேஸ்புக்கில் லைவ்.. சரமாரி துப்பாக்கி சூடு.. 21 பேரை கொன்ற தாய்லாந்து ராணுவ வீரர் சுட்டுக் கொலை
பாங்காங்: தாய்லாந்து நாட்டின் வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 20 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்று, 33 பேருக்கு காயங்கள் ஏற்படுத்திய
ராணுவ வீரர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் 12 மணி நேரம் நடைபெற்ற பதற்றம் முடிவுக்கு வந்தது.
தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கிலிருந்து 250 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, வடகிழக்கு நகரமான நகோன் ராட்சசிமாவில் நேற்று இரவு ஒரு பயங்கர சம்பவம் அரங்கேறியது.

ராணுவ வீரர் மேஜர் ஜக்ரபந்த் தோம்மா என்பவர் திடீரென ராணுவ வாகனத்தை திருடி மக்கள் நெருக்கம் உள்ள மால் ஒன்றுக்குள் புகுந்து, சரமாரியாக சுட ஆரம்பித்தார். தன்னைத்தானே புகைப்படங்களையும், வீடியோவையும் எடுத்து, பேஸ்புக்கில் வெளியிட்டார்.
இவர் சுட்டதில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டதோடு, 33க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். முந்தைய நாள் தனது பேஸ்புக் பக்கத்தில் "அனைவருக்கும் மரணம் தவிர்க்க முடியாதது" என்று எழுதிவைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. லைவ் வீடியோவை தொடங்கி சுட்டபடியே, "நான் இதை கைவிட வேண்டுமா?" என்றும் கேள்வி எழுப்பியிருந்தார் அந்த ராணுவ வீரர். இதுகுறித்து பேஸ்புக் நிர்வாகத்திற்கு புகார்கள் பறந்ததால், அந்த பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டது.
இதையடுத்து அந்த நகரமே பரபரப்புக்குள்ளானது. போலீசார் அப்பகுதியில் சுற்றி வளைத்தனர். ராணுவ வீரரை உயிரோடோ, அல்லது பிணமாகவோ, பிடித்துவிட வேண்டும் என்று தீவிர முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால், அவர் தாக்குதலை தொடர்ந்து கொண்டிருந்ததால், போலீசார் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்த சம்பவத்தில், ராணுவ வீரர் சுட்டுக் கொல்லப்பட்டார். தாய்லாந்து நேரப்படி இன்று காலை 9 மணிக்கு அவர் கொல்லப்பட்டார். இதனால் சுமார் 12 மணி நேரம் நீடித்த பதற்ற நிலை முடிவுக்கு வந்தது. அவரிடமிருந்து எத்தனை குண்டுகள் மற்றும் துப்பாக்கிகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன என்பது குறித்து இதுவரை தெரியவில்லை.












Click it and Unblock the Notifications