குரங்கு அம்மையை கட்டுப்படுத்த பாலியல் "பார்ட்னர்களை" குறைப்பதே ஒரே வழி.. WHO முக்கிய அறிவுரை
ஜெனிவா: குரங்கு அம்மை தொற்று பாதிப்பை குறைக்க தங்கள் செக்ஸ் பார்ட்னர்களை குறைக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட பாலியல் இணைகளை கொண்டிருப்பவர்கள் மூலம் இந்த தொற்று வேகமாக பரவும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் 78 நாடுகளில் சுமார் 18,000க்கும் அதிகமானோர் இந்த தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2019 முதல் தற்போது வரை உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று சுமார் 63,82,183 மனித உயிர்களை பலிவாங்கியுள்ளது. தொற்று பாதிப்பிலிருந்து விடுபட கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகள் உயிரிழப்பை கணிசமாக குறைத்துள்ளது. இந்நிலையில் மனித இனத்திற்கு அதுவும் குழந்தைகளுக்கு புதிய அச்சுறுத்தலாக குரங்கு அம்மை உருவாகியுள்ளது. இந்த தொற்று குறித்து உலக சுகாதார அமைப்பு அவசர நிலையையும் அறிவித்தது.
சென்னையில் குரங்கு அம்மை ஆய்வகம்.. மத்திய அரசு அனுமதி..செஸ் வீரர்களுக்கு பரிசோதனை - மா.சுப்ரமணியன்
குரங்கு அம்மை
இந்த குரங்கு அம்மை பாதிப்பு தற்போது ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின், ஸ்வீடன், பிரிட்டன் போன்றவற்றில் திடீரென அதிகரித்து வரும் நிலையில், கொரோனா போல மீண்டும் ஒரு பேரழிவை சந்திக்க வாய்ப்பிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அச்சம் தெரிவித்துள்ளது. இதுவரை ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்பில், 70 சதவிகிதம் ஐரோப்பாவிலும், 25 சதவிகிதம் அமெரிக்காவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த தொற்று எலி, அணில் போன்ற கொறித்துண்ணி விலங்குகளின் கடியாலோ, விலங்கின் கீறலாலோ, காட்டில் வேட்டையாடிய விலங்கின் இறைச்சியை உண்பது, குரங்கு அம்மை பாதிப்பு உள்ளவரோடு நெருங்கிய தொடர்பு, கொப்புளங்களில் இருந்து வரும் நீர் கலப்பு ஆகியவற்றால் பரவுகிறது.
அறிகுறிகள்
முதல் முதலில் குரங்குகளில் இந்த நோய் கண்டறியப்பட்டதால் குரங்கு அம்மை எனவும், மங்கி பாக்ஸ் எனவும் அழைக்கப்படுகிறது. விலங்குகள் மற்றும் மனிதர்கள் என பாலூட்டிகளை தாக்கும் குரங்கு அம்மை, பெரியம்மை வகை குடும்பத்தைச் சேர்ந்த குரங்கு அம்மை வைரசால் உண்டாகும் ஒரு தொற்றுநோய் ஆகும். காய்ச்சல், தலைவலி, உடலில் தசை வலி, நெறிகட்டுதல், களைப்பாக உணர்தல் ஆகிய அறிகுறிகள் முதலில் ஏற்படும். இதனைத்தொடர்ந்து கொப்புளம், தடிப்புகள் போன்றவை தோன்றலாம்.
உடனடியாகக் கவனம் செலுத்தாவிட்டால் மரணம் வரை கொண்டு செல்லும் வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கேரள மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்னர் இருவருக்கு இந்த நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து தற்போது நேற்று மேலும் ஒருவருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை இந்தியாவில் குரங்கு அம்மை தொற்றால் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காரணம்
இந்நிலையில் தொற்று வேகமாக பரவுவதற்கான காரணத்தை WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் விளக்கியுள்ளார். அதன்படி, இந்த வைரஸ் தொற்று இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று மத்திய ஆப்பிரிக்காவை மையமாக கொண்டது. மற்றொன்று மேற்கு ஆப்ரிக்காவை மையமாக கொண்டது. இதில் மத்திய ஆப்ரிக்காவை மையமாக கொண்ட வைரஸ் தீவிர தன்மைகொண்டது என விளக்கியுள்ளார். அதேபோல ஒன்றுக்கும் மேற்பட்ட பாலியல் துணைகளை கொண்டுள்ளவர்கள் மற்றும் பைசெக்ஷூவல் என அழைக்கப்படும் தன்பால் ஈர்ப்பு கொண்ட ஆண்களிடையேயும் இந்த தொற்று வேகமாக பரவுவதாக அதானோம் குறிப்பிட்டுள்ளார்.
ஆய்வுகள்
இந்த தொற்று பாதிப்பு குறித்து 528 பேரிடம் மேற்கொண்ட ஆய்வு குறித்து அதன் முடிவுகளை New England Journal of Medicine வெளியிட்டிருந்தது. ஆய்வின் முடிவில் 95 சதவிகிதத்தினர் பாலியல் நடவடிக்கை மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 98 சதவிகிதத்தினர் பைசெக்ஷூவல் அல்லது தன்பால் ஈர்ப்பு கொண்ட ஆண்களால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை கட்டிப்பிடிப்பது, முத்தமிடுவது, அவர்களுடன் உடலுறவு கொள்வது, அவர்களின் அந்தரங்க உறுப்புகளை தொடுவது போன்றவற்றின் மூலம் தொற்று எளிதாக மற்றவருக்கு பரவும் என டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் டாக்டர் திரேன் குப்தா ANI செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இது மட்டுமல்லாது, தொற்றால் பாதிக்கப்பட்டவரின் அசுத்த ஆடைகளை தொடும்போதும் வைரஸ் பரவும் என்றும் திரேன் குப்தா கூறியுள்ளார்.
Recommended Video
வேண்டுகோள்
இதனிடையே தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த தன்பால் ஈர்ப்பு கொண்ட ஆண்கள் புதியதாக இணையுடன் பாலுறவு கொள்வதை தவிர்க்க வேண்டும் என WHO தலைவர் அதானோம் வலியுறுத்தியுள்ளார். மேலும், இப்படியான புதிய உறவுகளை பரிசீலிக்க வேண்டிய நேரம் இது என்றும், அவ்வாறு உறவு கொண்டாலும் அந்த இணையின் முழு தகவல்களை சேகரித்து வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். கடந்த மே மாதம் தொடங்கிய இந்த குரங்கு அம்மை தொற்று பாதிப்பு இதுவரை 5 பேரை பலிவாங்கியுள்ளது. 10 சதவிகிதமானோர் குணமடைந்துள்ளனர்.
பாலுறவு மூலம் இது பரவினாலும், இந்த தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களின் ஆடைகள், அவர்களை தொடுவதன் மூலம் கூட இந்த தொற்று எளிதில் மற்றவருக்கு பரவும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். தன்பால் ஈர்ப்பு கொண்ட ஆண்கள் மட்டுமல்லாது குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடு உள்ளவர்கள் கூட இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தப்பட்ட முடிவு செய்யப்பட்டிருந்தாலும், உலகம் முழுவதும் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதை நாங்கள் பரிந்துரைக்கவில்லை என்று WHO கூறியுள்ளது. தடுப்பூசி இந்த தொற்றுக்கு எதிராக உடனடி தீர்வை கொடுக்காது என்றும் WHO திட்டவட்டமாக கூறியுள்ளது.