அம்மாடி, அரேபிய தீபகற்பத்தை தாக்கிய புழுதிப் புயல் இவ்வ்வ்ளோ பெருஸ்ஸா!!
துபாய்: அண்மையில் அரேபிய தீபகற்பத்தை தாக்கிய புழுதிப் புயல் அமெரிக்கா அளவுக்கு பெரிதாக இருந்தது செயற்கைக்கோள் எடுத்த புகைப்படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
கடந்த 1ம் தேதி சவுதியில் புழுதிப் புயல் அடிக்கத் துவங்கியது. சவுதியின் வடக்குப் பதியை தாக்கிய புழுதிப் புயல் அரேபிய தீபகற்பத்தின் தென்கிழக்காக நகர்ந்து சென்று அமெரிக்கா அளவுக்கு பெரிய பகுதியை தாக்கியது. புழுதிப் புயல் சவுதியை தாண்டி ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், இந்தியாவின் கிழக்கு பகுதி மற்றும் பாகிஸ்தானைக் கூட தாக்கியது.
சுமார் 7 நாட்களாக வீசிய புழுதிப் புயல் செல்லும் வழியில் ரியாத், துபாய் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பிரச்சனையை ஏற்படுத்தியது. சில இடங்களில் கண் முன் இருப்பது தெரியாத அளவுக்கு புயல் வீசியது. இதனால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டது, பள்ளிகள் மூடப்பட்டன. மேலும் பல இடங்களில் சாலை விபத்துகள் நடக்க புழுதிப் புயல் காரணமாக இருந்தது.
துபாய் சர்வதேச விமான நிலையத்தில் புழுதிப் புயலால் எதிரே உள்ளவை தெரியாமல் போனது. கடந்த வாரம் புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை 450க்கும் மேற்பட்ட சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் 678 விமானங்கள் தாமதமாக கிளம்பின. ஜெத்தா, ரியாத், தம்மாமில் இருந்து கிளம்பிய 19 விமானங்கள் வேறு வழியாக திருப்பிவிடப்பட்டன.
இத்தனை அசௌகரியத்தை ஏற்படுத்திய புழுதிப் புயல் அமெரிக்கா அளவுக்கு பெரிதாக இருந்தது செயற்கைக்கோள் எடுத்த புகைப்படங்களின் மூலம் தெரிய வந்துள்ளது.