உக்ரைன் போர்.. நாளை 2ஆம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை.. நல்ல செய்தி கிடைக்குமா? பரபர தகவல்
கீவ்: உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடரும் நிலையில், நாளை இரண்டாம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் நாட்டின் கடந்த வியாழக்கிழமை ரஷ்ய ராணுவம் முழு வீச்சில் தனது ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. இந்தப் போர் 5 நாட்களைக் கடந்தும் இன்றும் தொடர்கிறது.
ரஷ்ய ராணுவம் உக்ரைன் எல்லையில் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து ராணுவத்தைக் குவித்து வந்த போதிலும், திடீரென இப்படி முழு வீச்சிலான போரைத் தொடங்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இதனால் உலக நாடுகள் பெரும் அச்சத்தில் உள்ளன.

பேச்சுவார்த்தை முயற்சி
இந்தச் சூழலில் அண்டை நாடான பெலாரஸ் நாட்டில் வைத்து உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக உள்ளதாக ரஷ்யா கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. ரஷ்யா உடன் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் ஒப்புக் கொண்டார். அதன்படி உக்ரைன்-பெலாரஸ் எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையே நேற்று (திங்கள்கிழமை) முதற்கட்ட அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இந்த அமைதி பேச்சுவார்த்தை சுமார் 5 மணி நேரம் நீட்டித்தது.

உக்ரைன் வலியுறுத்தல்
இந்தப் பேச்சுவார்த்தையில் உக்ரைன் நாட்டில் உள்ள அனைத்து ரஷ்யப் படைகளையும் திரும்பப் பெற வேண்டும் என உக்ரைன் தரப்பு வலியுறுத்தியுள்ளது. மேலும், இந்தப் பேச்சுவார்த்தையில் இரு தரப்பும் ஒப்புக்கொள்ளும் வகையிலான விஷங்கள் அடையாளம் காணப்பட்டதாக உக்ரைன் தரப்பில் கூறப்பட்டது.. சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடந்து முடிந்த நிலையில், விரைவில் போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது,

மீண்டும் தாக்குதல்
இருப்பினும், இன்றைய தினம் ரஷ்ய ராணுவம் மீண்டும் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியது. உக்ரைன் தலைநகர் கீவ், கார்கிவ் நகரங்களில் ரஷ்ய ராணுவம் ஏவுகணை தாக்குதலை நடத்தியதாகத் தகவல் வெளியானது. மேலும், பல நகரங்களில் ரஷ்ய ராணுவம் தாக்குதலை மீண்டும் தொடங்கியது. குறிப்பாக, இன்று ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டார். இது உக்ரைனில் வசிக்கும் மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

2ஆம் கட்ட பேச்சுவார்த்தை
முதற்கட்ட அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததாலேயே ரஷ்ய ராணுவம் மீண்டும் தாக்குதலைத் தொடங்கி உள்ளதாகத் தகவல் வெளியானது. இதற்கிடையே தலைநகர் கீவ் நகரில் உள்ள உளவு அலுவலகங்களில் அருகே வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் ரஷ்யா எச்சரிக்கை விடுத்தது. இது பதற்றத்தை மேலும் அதிகரித்தது. இந்தச் சூழலில், நாளை மார்ச் 2ஆம் தேதி இரு தரப்பிற்கும் இடையே 2ஆம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை நடைபெறும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. இதில் உடன்பாடு எட்டப்படும் பட்சத்தில் போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications