600க்கும் மேற்பட்டோரின் உயிர் குடித்த இஸ்ரேல்-காஸா மோதல்: என்னதான் நடக்கிறது?
காஸா: இஸ்ரேலின் தொடர் தாக்குதலில் இதுவரை காஸாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 604 ஆக அதிகரித்துள்ளது.
இஸ்ரேல் ராணுவத்திற்கும், பாலஸ்தீனத்தில் உள்ள காஸாவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே போர் நடந்து வருகிறது. காஸா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 604 பேர் பலியாகியுள்ளனர்.
கடத்தல்
பாலஸ்தீனத்தில் உள்ள மேற்குக் கரைப் பகுதியில், இஸ்ரேலைச் சேர்ந்த 3 சிறுவர்கள் கடந்த ஜூன் மாதம் 12ம் தேதி ஹமாஸ் போராளிகளால் கடத்தப்பட்டதால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
கைது
சிறுவர்கள் கடத்தப்பட்டதை அடுத்து இஸ்ரேல் படையினர், பாலஸ்தீனியர்களின் வீடுகளுக்குள் புகுந்து 20 பேரை கைது செய்தனர்.
ஹமாஸ்
இஸ்ரேல் வீரர்கள் மூத்த ஹமாஸ் தலைவர்கள் உள்பட 86 பேரை மேற்குக் கரையில் வைத்துக் கைது செய்தனர்.
ராக்கெட்
இதையடுத்து ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் பகுதியில் ராக்கெட் தாக்குதலில் குதித்தனர். பதிலுக்கு இஸ்ரேலும் ராக்கெட் வீசியது.
கொலை
இந்த நிலையில், 3 சிறுவர்களை தேடிய இஸ்ரேல் ராணுவம் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் புகுந்து 15 வயது சிறுவனான முகமது துதினை கொலை செய்தது.
3 சிறுவர்கள் கொலை
மேலும் கடத்தப்பட்ட 3 இஸ்ரேலிய சிறுவர்கள் பிணமாகக் கிடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே மோதல் வலுப்பெற்றது. இஸ்ரேலின் அதிரடி வேட்டையில் 400க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கைது செய்யப்பட்டனர், 6 பேர் கொலை செய்யப்பட்டனர். பதிலடியாக இஸ்ரேல் மீது 40 ராக்கெட்டுகள் வீசித் தாக்கப்பட்டது.
வான் தாக்குதலில் குதித்த இஸ்ரேல்
இதையடுத்து இஸ்ரேல் காஸாவில் உள்ள 34 பகுதிகளில் வான் மூலம் தாக்குதல் நடத்தியது ராணுவம்.
அல் கொய்தா
இந்த நிலையில், சிறுவர்களை கொன்றது தாங்கள் தான் என்று அல் கொய்தாவுடன் தொடர்புடைய அமைப்பு ஒன்று பொறுப்பேற்றது. ஆனால் அதை இஸ்ரேல் நம்பவில்லை. தாக்குதலை உக்கிரப்படுத்தியது.
எரித்துக் கொலை
3 இஸ்ரேலிய சிறுவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட மறுநாள் ஜெருசலேம் காடுகளில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் முகமது அபு காதிர் எரித்துக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையேயான மோதல் அதிகரித்தது.
காஸா
காஸாவில் இருந்து அதிக அளவில் ராக்கெட்டுகள் வந்து இஸ்ரேலை தாக்கின. பதிலுக்கு இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 9 ஹமாஸ் அமைப்பினர் பலியாகினர்.
ஆபரேஷன் எட்ஜ்
காஸா மீது நூற்றுக்கணக்கான வான் வெளித் தாக்குதல் நடத்தும் ஆபரேஷன் ப்ரொடெக்டிவ் எட்ஜை இஸ்ரேல் அறிமுகப்படுத்தியது.
அமெரிக்கா
இஸ்ரேலில் நடத்தப்படும் தாக்குதல் மற்றும் காஸாவில் தீவிரவாத அமைப்புகள் பொதுமக்களை குறிவைத்து தாக்குவதை அமெரிக்கா கடுமையாக கண்டித்தது. பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. தங்களை பாதுகாத்துக் கொள்ள செயல்படும் இஸ்ரேலை நாங்கள் ஆதரிக்கிறோம் என்றது அமெரிக்கா.
48 மணிநேரத்தில்
இஸ்ரேல் ஆபரேஷன் எட்ஜை துவங்கிய 48 மணிநேரத்தில் காஸாவில் ஒரு பத்திரிக்கையாளர், 80 வயது மூதாட்டி, 12 குழந்தைகள் உள்பட 64 பேர் கொல்லப்பட்டனர். ஜூலை 9ம் தேதி இஸ்ரேல் மீது 180 ராக்கெட்டுகள் வீசப்பட்டன. முன்னதாக காஸாவில் 25 வீடுகள் சேதப்படுத்தப்பட்டன.
முதல் முறையாக
ஹமாஸ் முதல்முறையாக வடக்கு இஸ்ரேலின் மிகப்பெரிய நகரமான ஹைஃபா மீது ராக்கெட் வீசித் தாக்கியது. இதன் மூலம் நீண்ட தூரம் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணையை பயன்படுத்தத் துவங்கியது ஹமாஸ். அடுத்த 72 மணிநேரத்தில் காஸாவில் 750 இலக்குகளை தாக்கியது இஸ்ரேல்.
தாக்குதல்
இஸ்ரேல் காஸாவில் உள்ள 632 ஏவுகணை ஏவும் தளங்கள், 130 ராணுவ தளங்கள், 220 தீவிரவாதிகளின் பதுங்கு குழிகள் உள்ளிட்ட 1,220 இடங்களை தாக்கியது. இதனால் பலி எண்ணிக்கை 150ஐ கடந்தது.
ஐ.நா.
அமைதி திரும்ப வேண்டும் என்று அறிக்கை வெளியிட்ட ஐ.நா. இரு தரப்பின் செயல்களையும் கண்டிக்கவில்லை.
வீடுகள்
காஸாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 166 ஆக அதிகரித்தது. மேலும் 10 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து இஸ்ரேலில் 130 ராக்கெட்டுகள் வீசப்பட்டது.
எகிப்து
அமைதியை ஏற்படுத்த எகிப்து அரசு இஸ்ரேல், ஹமாஸ் இடையே ஒப்பந்தம் ஏற்பட முயற்சி செய்தது. இதற்கு இஸ்ரேல் ஒப்புக் கொண்டாலும், ஹமாஸ் நிராகரித்துவிட்டது.
5 மணிநேரம்
காஸா கடற்கரையில் 4 குழந்தைகள் கொலை செய்யப்பட்ட பிறகு 5 மணிநேரம் தாக்குதலை நிறுத்த இஸ்ரேலும், ஹமாஸும் ஒப்புக் கொண்டது. அப்போது பாலஸ்தீனத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 213 ஆக அதிகரித்திருந்தது.
ஜூலை 17
காஸாவை வான், தரை, கடல் வழியாகத் தாக்கி ஹமாஸ் தீவிரவாதிகளின் பதுங்கு குழிகளை அழிக்கப்போவதாக இஸ்ரேல் கடந்த 17ம் தேதி தெரிவித்தது.
140 பேர்
காஸாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 500-ஐ தொட்டது. ஒரே நாளில் 140க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கடந்த 20ம் தேதி கொல்லப்பட்டனர். இது தவிர 27 இஸ்ரேல் வீரர்கள் பலியாகினர்.
600
காஸாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 600-ஐ தாண்டிவிட்டது. ஜூலை 22ம் தேதி காஸாவில் உள்ள 5 ஆயிரம் வீடுகளுக்கு மேல் தாக்கப்பட்டது.
இந்தியா
காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.