நைஜீரியா காடுகளில் போக்கோ ஹரம் தீவிரவாதிகளின் மூத்த தலைவர் முகமது ஜகரி கைது
லாகோஸ்: போக்கோ ஹரம் தீவிரவாதிகளின் மூத்த தலைவர் முகமது ஜகரியை போலீசார் நைஜீரியாவில் வைத்து கைது செய்துள்ளனர்.
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போக்கோ ஹரம் தீவிரவாதிகள் அட்டூழியம் செய்து வருகிறார்கள். அவர்கள் அவ்வப்போது கிராமங்களுக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவது, மக்களை கடத்துவது என்று அநியாயம் செய்கின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி சிபோக் நகரில் இருந்து 217 பள்ளி மாணவிகளை கடத்தினர். அவர்கள் இன்னும் விடுவவிக்கப்படவில்லை.
தீவிரவாதிகளின் உளவுப் பிரிவு தலைவரான தொழில் அதிபர் பாபுஜி யாரி இந்த மாத துவக்கத்தில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தீவிரவாத அமைப்பின் மூத்த கமாண்டரான முகமது ஜகரியை (30) போலீசார் நைஜீரியாவில் வைத்து கைது செய்துள்ளனர். கடந்த 2009ம் ஆண்டில் இருந்து பெண்கள், குழந்தைகள் உள்பட நூற்றுக்கணக்கானோரை கொலை செய்த வழக்கில் தொடர்புடையவர் ஜகரி.
நைஜீரியாவின் பாவ்சி மாநிலத்தில் உள்ள பால்மோ காடுகளில் பாதுகாப்பு துறையினர் கடந்த சனிக்கிழமை நடத்திய தேடுதல் வேட்டையில் தான் ஜகரி சிக்கினார். ஜகரி காம்பே காடுகளில் அப்பா டாரா என்ற தீவிரவாதியிடம் பயிற்சி பெற்றுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. ஜகரி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தான் பால்மோ காடுகளுக்கு வந்துள்ளார்.
போக்கோ ஹரம் வடகிழக்கு நைஜீரியா, வடக்கு காமரூன் மற்றும் நைஜரை சார்ந்து உள்ளது. போக்கோ ஹரமை தனி இஸ்லாமிய மாநிலமாக அறிவித்து அதை ஷரியத் சட்டப்படி ஆள வேண்டும் என்று தான் தீவிரவாதிகள் போராடி வருகிறார்கள்.
தீவிரவாதிகள் நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் 10 ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் நைஜீரியாவின் போர்னோ மாநில எல்லையில் உள்ள லிமானி நகரின் முக்கிய மத தலைவரான பீஷெய்ர் மொஹமனின் வீட்டுக்குள் புகுந்து அவரது மகன்கள் பீஷெய்ர் ஹஷிமிர் மற்றும் பீஷெய்ர் கவாயே ஏக் ஆகியோரை கடத்திச் சென்றுள்ளனர்.
மொஹமன் தங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்ததுடன், காமரூன் ராணுவத்திற்கு தங்களை பற்றி தகவல் அளித்ததால் தீவிரவாதிகள் அவரது வீட்டுக்குள் புகுந்தனர். ஆனால் அப்போது அவர் வீட்டில் இல்லாததால் அவரது மகன்களை கடத்திச் சென்றுவிட்டனர்.