கென்யாவில் ஷாப்பிங் மாலில் துப்பாக்கிச்சூடு: 2 இந்தியர்கள் உள்பட 39 பேர் பலி, 150 பேர் காயம்
நைரோபி: கென்யாவில் உள்ள ஷாப்பிங் மாலில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 இந்தியர்கள் உள்பட 39 பேர் பலியாகினர்.
கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள ஷாப்பிங் மாலுக்குள் நேற்று துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் புகுந்தனர். அவர்கள் மாலில் இருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டனர். இதில் 39 பேர் பலியாகினர், 150 பேர் காயம் அடைந்தனர்.
பலியானவர்களில் பார்மா கம்பெனியில் பணிபுரிந்த இந்தியரான ஸ்ரீதர் நடராஜன்(40) மற்றும் நைரோபியில் உள்ள பேங்க் ஆஃப் பரோடா கிளை மேனேஜரின் மகன் பரம்ஷு ஜெயின்(8) ஆகியோரும் அடக்கம். மேலும் 2 பெண்கள், ஒரு சிறுமி உள்பட 4 இந்தியர்கள் காயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் நடந்தபோது அந்த மாலில் 1,000 பேர் இருந்தனர். சோமாலியா விவகாரத்தில் கென்ய ராணுவம் தலையிடுவதற்கு பதில் அடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக சோமாலியாவில் செயல்படும் அல் கொய்தா அமைப்பின் கூட்டாளியான ஷெபாப் போராளிகள் தெரிவித்துள்ளனர்.
சோமாலியாவில் ஆப்பிரிக்க ராணுவம் இஸ்லாமிய போராளிகளுக்கு எதிராக போராடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.