இந்தியா - இங்கிலாந்து 2022 வாரக் கொண்டாட்டம்.. மண் காப்போம் பிரச்சாரம் பற்றி சத்குரு பேச்சு!
லண்டன்: இந்திய குளோபல் ஃபோரம் உச்சி மாநாட்டில் கிரியேட்டிவ் இண்டஸ்ட்ரி & கலாசாரப் பொருளாதாரக் கருத்தரங்கின் இரண்டாம் நாளில், காலநிலை மாற்றம், நிதி மற்றும் தொழிற்நுட்பம் குறித்து பேசப்பட்டது.
இந்திய குளோபல் ஃபோரம் சார்பாக இந்தியா - இங்கிலாந்து நாடுகளின் இடையிலான உறவை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் இங்கிலாந்து - இந்தியா வாரம் ஏற்பாடு செய்யப்படுகிறது. 2022ஆம் ஆண்டு ஜூன் 27 முதல் ஜூலை 1 வரை நடைபெறும் இந்தக் கொண்டாட்டத்தின் இரண்டாம் நாளில் இந்தியா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த மூத்த அமைச்சர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்துறைத் தலைவர்கள் பங்கேற்றனர். கருத்தரங்கு கூட்டத்தில் காலநிலை மாற்றம், தொழில்நுட்பம், நிதி குறித்த மேம்பாட்டு நடவடிக்கைகள் உள்ள சிரமங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பேச்சு
இந்த கருத்தரங்கில் கலந்துகொண்ட இந்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் பேசுகையில், வளரும் நாடுகளுக்கு, நாடு கடந்த நிதி முக்கியமானது. அதேபோல் வளர்ந்த நாடுகள் 100 பில்லியன் டாலர் நிதி இலக்கை நிறைவேற்ற வேண்டும். இந்த காலநிலை நிதி என்பது மூன்று விஷங்களில் கவனம் செலுத்த வேண்டும். அவை, நோக்கம், அளவு மற்றும் வேகம் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், காலநிலை மாற்றம் என்பது எதிர்காலத்திற்கான பேரழிவு அல்ல. அது இப்போதைய அழிவு என்பது நடைமுறை உண்மை. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை செயல்படுத்த இந்தியா உள்நாட்டு வளங்களை மட்டுமே நம்பியுள்ளது. நிதி மற்றும் தொழிற்நுட்ப பரிமாற்றத்தைப் பாதுகாப்பதன் மூலம் காலநிலை மாற்ற கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் சர்வதேச இலக்கை எட்டிபிடிக்க செயல்பாடுகளை விரைவுபடுத்த வேண்டும். தொழில்நுட்ப பேச்சுவார்த்தைகள் மற்றும் அரசியல் ஏற்பாடுகள் ஆகிய இரண்டிலும் காலநிலை நிதி மற்றும் தழுவல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
இங்கிலாந்து அமைச்சர் பேச்சு
தொடர்ந்து பசுமையான எதிர்காலத்திற்காக முதலீடு செய்வது குறித்த அமர்வில், இங்கிலாந்தின் முதலீட்டு துறை அமைச்சர் லார்ட் ஜெர்ரி கிரிம்ஸ்டோன் பேசுகையில், இந்திய நிறுவனங்கள் இங்கிலாந்தில் பசுமை நிதியை திரட்ட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதில் பணியாற்றுவதற்கும், பிஎச்டி மாணவர்களை பரிமாறிக் கொள்வதற்கும் பல்கலைக்கழகங்களை ஊக்குவிக்க வேண்டும். அது நடக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற மற்ற அமர்வுகளில், எரிசக்தி துறை வடிவமைப்புக்கான வணிக பங்களிப்பு, காலநிலையை சீர்குலைப்பதில் தொழிற்நுட்பத்தின் பங்கு ஆகியவை குறித்து பேசப்பட்டது.
காலநிலை உச்சி மாநாடு
இதன்பின்னர் பேசிய காலநிலை உச்சி மாநாடு தலைவர் அலோக் ஷர்மா, கிளாஸ்கோவில் நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலநிலை உடன்படிக்கைக்கு ஏறக்குறைய 200 நாடுகளை ஒப்புதல் அளித்தன. ஏனெனில் ஒவ்வொரு நாடும் தங்கள் சொந்த நலனுக்காக செயல்படுவதைக் கண்டோம். ஆனால் 27வது காலநிலை உச்சி மாநாட்டிற்காக பணிகளை விரைவுபடுத்த வேண்டும். நாம் புதைபடிவ எரிபொருட்களை நம்ப முடியாது. அதுமட்டுமல்லாமல், உலகில் ஒவ்வொரு முறையும் மீண்டும் பயன்படுத்துவதற்கான புதுப்பிக்கத்தக்க எரி பொருட்களை துரிதப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்று தெரிவித்தார். தொடர்ந்து, "பிரதமர் மோடி காலநிலை நடவடிக்கை விவகாரத்தில் மிகவும் உறுதியாக இருக்கிறார். காலநிலை இலக்குகளில் இங்கிலாந்துடன் இணைந்து பணியாற்ற இந்திய அரசாங்கத்தின் தரப்பில் உண்மையான அர்ப்பணிப்பு உள்ளது என்று தெரிவித்தார்.
சத்குரு எச்சரிக்கை
இறுதியாக பேசிய ஈஷா அமைப்பின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ், ஒரு தலைமுறையாக, நாம் ஒரு சவாலை எதிர்கொள்கிறோம். மண்ணைப் பற்றி பேசாமல், காலநிலை மாற்றம் அல்லது புவி வெப்பமடைதலை நாம் எவ்வாறு எதிர்கொள்ள முடியும். உலகின் புவி வெப்பமடைதலில் கிட்டத்தட்ட 35-40 சதவீதம் மண்ணால் ஏற்படுகிறது. சேவ் சாயில் பிரச்சாரம் என்பது மக்கள் தங்கள் அரசிடம் இருந்து மாற்றத்தைக் கட்டாயமாக்குவதற்கு ஊக்கப்படுத்துவதற்காக தான்; 2030ஆம் ஆண்டுக்குள் ஆப்பிரிக்க கண்டத்தில் மூன்றில் 2 பங்கு நிலம் சீரழிந்துவிடும் என்று கூறப்படுகிறது. கடந்த 25 ஆண்டுகளில், உலகின் 10 சதவீத நிலத்தை பாலைவனமாக்கலுக்கு இழந்துள்ளோம். இதைவிட நம்மை எழுப்புவதற்கு வேறு என்ன தேவை? என்று பேசினார்.
இதன் பின்னர் இந்திய குளோபல் ஃபோரும் தலைமை நிர்வாக அதிகாரி பேராசிரியர் மனோஜ் லட்வா பேசுகையில், வரும் தலைமுறையினருக்காக காலநிலை மாற்றம் பற்றி நாம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கே, காலநிலை மாற்றத்திற்கு எதிரான நமது உலகளாவிய போராட்டத்தில் தொழில்நுட்ப மற்றும் நிதி குறித்த வழிகளைத் தேடுவதில் இந்த கருத்தரங்கு முக்கிய பங்கு வகிக்கிறது என்று பேசினார்.