"Dirty Bombs.." அணு ஆயுதங்களை மிக ரகசியமாக தயாரிக்கும் உக்ரைன்.. ரஷ்யா பகீர் குற்றச்சாட்டு
மாஸ்கோ: உக்ரைனுக்கு எதிரான போர் உச்சமடைந்து வரும் நிலையில், அணு ஆயுதங்கள் தொடர்பாக ரஷ்ய ராணுவம் சில அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளன.
உக்ரைன் நாட்டில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டே செல்கிறது. ஒவ்வொரு நாளும் ரஷ்ய ராணுவம் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்திக் கொண்டே செல்கிறது.
ரஷ்யா ராணுவத்தைக் கண்டு அஞ்சாமல் உக்ரைன் வீரர்களும் தொடர்ந்து துணிச்சலாகப் போராடி வருகின்றனர். இதன் காரணமாகப் போர் 10 நாட்களைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது.

போர் நடவடிக்கை
உக்ரைன் எல்லையில் ஜன. மாதம் முதலே வீரர்களைக் குவித்து வந்தது. இதனால் உக்ரைன் எல்லையில் பதற்றமான சூழல் உருவான நிலையில், கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில் உக்ரைன் மீது முழு வீச்சில் போரைத் தொடங்க அதிபர் புதின் உத்தரவிட்டார், உக்ரைனில் இனப்படுகொலை நடப்பதாகக் குற்றஞ்சாட்டிய புதின், உக்ரைன் ராணுவ மயமாக்கலைத் தடுக்கவும் ரஷ்யாவின் பாதுகாப்பை உறுதி செய்யவுமே இந்த போர் நடவடிக்கை எடுப்பதாக விளக்கம் தெரிவித்தார்.

கடும் அழுத்தம்
உலக நாடுகள் எதுவும் புதின் போரை ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கவில்லை. அதிகபட்சம் ரஷ்ய ஆதரவு பிரதேசங்களை ரஷ்யாவுடன் புதின் இணைத்துக் கொள்வார் என்றே கருதினர். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் புதின் முழு வீச்சில் போரை ஆரம்பித்தார். ரஷ்ய அதிபர் புதினின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டம் தெரிவித்த உலக நாடுகள், ரஷ்யா மீது இதுவரை இல்லாத அளவுக்குக் கடுமையான பொருளாதாரத் தடைகளை அறிவித்து வருகிறது.

ரஷ்யா குற்றச்சாட்டு
சர்வதேச அளவில் ரஷ்யாவுக்கு எதிரான அழுத்தம் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், உக்ரைன் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது. 2000ஆம் ஆண்டு மூடப்பட்ட செர்னோபில் அணுமின் நிலையத்தில் வைத்து உக்ரைன் அணு ஆயுதங்களைத் தயார் செய்து வருவதாக ரஷ்யச் செய்தி நிறுவனங்களான டிஏஎஸ்எஸ், ஆர்ஐஏ மற்றும் இன்டர்பேக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளன.

அணு ஆயுதங்கள்
முன்னாள் சோவியத் நாடுகளில் ஒன்றான உக்ரைனில், சோவியத் ஒன்றியம் வீழ்ந்த சமயத்தில் நூற்றுக்கணக்கான அணு ஆயுதங்கள் இருந்தன. இருப்பினும், உக்ரைன் தனி நாடாக உருவான பின்னர், தன்னிடம் இருந்த அணு ஆயுதங்களை அழித்துவிட்டு அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் கையெழுத்திட்டது. இந்தச் சூழலில் தான் உக்ரைன் மீண்டும் அணு ஆயுதங்களைத் தயார் செய்து வருவதாக ரஷ்யா செய்திகளை வெளியிட்டுள்ளன.

புதின் குற்றச்சாட்டு
கடந்த பிப். 24ஆம் உக்ரைன் மீது போர் தொடுப்பதாக அறிவித்த போதும் கூட சோவியத் அறிவியலைப் பயன்படுத்தி உக்ரைன் சொந்தமாக அணு ஆயுதங்களை உருவாக்குவதாகவும், இது ரஷ்யா மீதான தாக்குதலுக்குத் தயார் செய்வதற்குச் சமம் என்றும் குறிப்பிட்டிருந்தார். உக்ரைன் ஆய்வாளர்களால் அணு ஆயுதங்களைத் தயார் செய்யும் தொழில்நுடப்தத்தை சீக்கிரம் டெவலப் செய்ய முடியும் என்றாலும் கூட, மீண்டும் அணு ஆயுதங்களைத் தயார் செய்யும் எண்ணம் இல்லை என்றே உக்ரைன் தொடர்ச்சியாகக் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications