போரை நிறுத்துங்க.. மழலை மொழியில் ரஷ்யாவுக்கு கோரிக்கை வைத்த குழந்தை.. நெகிழ்ச்சியான வீடியோ
கீவ்: ‛‛போரை நிறுத்துங்கள்... நாம் அனைவரும் சகோதர, சகோதரிகள்'' என உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு குழந்தை ஒன்று கோரிக்கை விடுக்கும் வீடியோ வைரலாகி உள்ளது.
Recommended Video
போர்... அதிகார ஆசையில் மனித குலத்தை அழிக்கும் வேராக உள்ளது. போர் என்று வந்துவிட்டால் ஒருவரின் ஆட்சி பரப்பை அதிகரித்து அதிகாரத்தை விரிவுப்படுத்துவதற்காக ராணுவவீரர்கள், அப்பாவி மக்கள் நிச்சயம் மரணமடைவார்கள்.
மேலும் போரில் அணுஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் அது பல தலைமுறைகளை பாதிக்க செய்யும். ஹீரோஷிமா, நாகசாகி சம்பவங்களே இதற்கு சாட்சி.

ரஷ்யாவின் போர்
இதனால் தான் பெரும்பாலான தலைவர்கள் போரை விரும்புவது இல்லை. மேலும் உலகம் முழுவதும் அமைதி நிலவ வேண்டும். மக்களின் ஒற்றுமை அதிகரிக்க வேண்டும் என அனைத்து மதத்தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் பல்வேறு எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதின் உக்ரைன் மீது பிப்ரவரி 24 முதல் போரை தொடர்ந்தார்.

அப்பாவிகள் மரணம்
இதில் ரஷ்யா, உக்ரைன் ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்து வருகின்றனர். உக்ரைனில் முறையான பயிற்சி இன்றி நாட்டை காக்க துப்பாக்கி ஏந்தியுள்ள பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் என அப்பாவிகளும் பலியாகி வருகின்றனர். உக்ரைன் நாட்டு மக்களுக்காக ஏராளமானவர்கள் பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ரஷ்யாவின் போரை சமாளிக்க அமெரிக்கா உள்பட பல நாடுகள் ஆயுதங்கள், பண உதவிகள் செய்து வருகின்றன.

போரை நிறுத்துங்க..
இந்நிலையில் தான், போர் வேண்டாம் என லில்லி எனும் குழந்தை மழலை மொழியில் பேசும் வீடியோ வெளியாகி உள்ளது. பிரிட்டனி & லில்லி எனும் இன்ஸ்டா பக்கத்தில் வெளியான வீடியோவில், ‛‛இந்த பூமியில் நான் அமைதியை விரும்புகிறேன். பூமி துண்டாகுவதை நான் விரும்பவில்லை. நாம் அனைவரும் சகோதர, சகோதரிகள். போரை நிறுத்துங்கள்'' என குழந்தை கூறுகிறது.

வீடியோ வைரல்
இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து குழந்தையை பாராட்டி வருகின்றனர். மேலும் உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என ஒவ்வொருவரும் கடவுளை பிரார்த்திப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது அனைத்து சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

தந்தை-மகள் பாசம்
முன்னதாக உக்ரைனில் வசிக்கும் 16 முதல் 60 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் ராணுவ பணிகளில் ஈடுபட உக்ரைன் அரசு உத்தரவிட்டது. இதனால் சில நாட்களுக்கு முன்பு ஒருவர் தனது மகளை பாதுகாப்பான இடத்துக்கு பேருந்தில் அனுப்பினார். அப்போது அந்த தந்தையும், மகளும் கண்கலங்கிய நிலையில் அங்கு நடந்த பாசப்போராட்டம் வீடியோவாக வெளியாகி அனைவரின் மனதையும் உருக வைத்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications