நாட்டைக்காக்க போர்க்களத்தில் தீரத்துடன் போராடும் வீரர்கள்...சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய ஜெலன்ஸ்கி
ராணுவ வீரர்களுக்கு 3,400 அமெரிக்க டாலர் ஊதியமாக வழங்கப்படும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கீவ்: உக்ரைன் - ரஷ்யா இடையே போர் நடைபெற்று வரும் சூழலில், ராணுவ வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அவர்களுக்கான ஊதியத்தை அதிரடியாக உயர்த்தி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மாத ஊதியம் 340 அமெரிக்க டாலரில் இருந்து 3400 அமெரிக்க டாலராக உயர்த்தப்பட்டுள்ளது.
ரஷ்யாவை ஒட்டிய நாடான உக்ரைனின் மீது கடந்த சில தினங்களுக்கு முன்னர் போர் தொடுத்தது ரஷ்யா. ரஷ்யாவின் பெரும்படைக்கு எதிராக சிறிய நாடான உக்ரைனும் தொடர்ந்து போரிட்டுவருகிறது. உக்ரைனின் படைகளை வீழ்த்தி ரஷ்யா முன்னேறி வருகிறது. அதேவேளையில், உக்ரைன் தரப்பிலும் கடும் பதிலடி தரப்பட்டு வருகிறது.

5 நாளாக நடக்கும் போரில் ரஷ்ய ராணுவ வீரர்கள் 5,300 பேர் வரை இறந்திருக்கலாம் என உக்ரைன் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. 29 போர் விமானங்கள், 29 ஹெலிகாப்டர்கள், 191 பீரங்கிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன என உக்ரைன் ராணுவம் கூறியுள்ளது. 200 ராணுவ வீரர்களை சிறை பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய தாக்குதலில் தங்கள் நாட்டைச் சேர்ந்த 16 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும் 3,50,000 குழந்தைகள் கல்வி கற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.
போர் காரணமாக பலரும் உக்ரைனை விட்டு அகதிகளாக வெளியேறியுள்ள சூழலில், வெளிநாடுகளில் வசிக்கும் ஒருசிலர் தங்கள் தாய்நாட்டிற்காக உக்ரைன் திரும்பி ராணுவத்தில் இணைந்து போரிட்டு வருகின்றனர். இந்நிலையில், தீரத்துடன் போரில் ஈடுபட்டுவரும் வீரர்களை கவுரவிக்கும் வகையில் அவர்களின் ஊதியத்தை பலமடங்கு உக்ரைன் உயர்த்தியுள்ளது.
இதற்கு முன்பு குறைந்தபட்ச மாத ஊதியம் என்பது 340 அமெரிக்க டாலராக இருந்தது. தற்போது, ராணுவ வீரர்களுக்கு 3,400 அமெரிக்க டாலர் ஊதியமாக வழங்கப்படும் என்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இது இந்திய ரூபாய் மதிப்பில், ஏறக்குறைய 2.50 லட்சம் ஆகும்












Click it and Unblock the Notifications