புற்றுநோயை விட இரண்டு மடங்கு அதிக மக்களை கொல்லப்போவது காலநிலை மாற்றம்: ஐநா எச்சரிக்கை
ஜெனீவா: உலகம் முழுவதும் அதிகரித்து வரும் காலநிலை மாற்றம் கட்டுப்படுத்தப்படவில்லையெனில் புற்றுநோய் பாதிப்பை காட்டிலும் இரண்டு மடங்கு அதிக உயிரிழப்பை இது ஏற்படுத்திவிடும் என ஐநா எச்சரித்துள்ளது.
ஐநா வளர்ச்சித் திட்டம் (UNDP) மற்றும் காலநிலை தாக்க ஆய்வகம் வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரங்களில் இந்த தகவல்கள் தெரிய வந்துள்ளன.
காலநிலை மாற்றம் காரணமாக பிரிட்டன் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இந்த ஆண்டு கடும் பாதிப்பை எதிர்கொண்ட நிலையில் தற்போது இந்த புள்ளி விவரங்கள் புதிய அச்சத்தை உலக நாடுகள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
கோவை கார் வெடிப்பு: ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு.. கைதான ஆம்பூர் இளைஞர் வீட்டில் போலீஸ் பரபர சோதனை
வெப்பநிலை
காலநிலை மாற்றம் என்பது தற்போது உலகம் முழுவதும் புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. வளர்ந்த நாடுகள் வெளியேற்றும் கரியமில வாயு காரணமாக வளரும் நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மனிதனின் சுயநலம் காரணமாக 19ம் நூற்றாண்டின் இறுதியில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு புவியின் வெப்பநிலை 1.2 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. வெறும் 1.2 டிகிரிதானே? என்று நாம் இதை அசலாட்டாக நினைக்கலாம். ஆனால் இது ஏற்படுத்திய பாதிப்பு என்னென்ன தெரியுமா? இந்த ஆண்டு ஜூலை மாதம் பிரிட்டனில் ஏற்பட்ட வெப்ப அலை இந்த காலநிலை மாற்றத்தால்தான் ஏற்பட்டிருக்கிறது.
உயிரிழப்பு
அதேபோல பாகிஸ்தானில் ஜூன் மாதம் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சுமார் 1,700க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 5 கோடி மக்கள் வீடு உள்ளிட்ட உடைமைகளை இழந்து தவித்தனர். இதற்கும் இந்த காலநிலை மாற்றம்தான் காரணம். இவ்வாறு இருக்கையில் இதனை கட்டுப்படுத்தவில்லையெனில் உலகம் முழுவதும் ஒரு ஆண்டில் புற்றுநோயால் உயிரிழக்கும் மக்களை காட்டிலும் அதிக உயிரிழப்பு ஏற்படும் என ஐநா எச்சரித்துள்ளது. ஐநா வளர்ச்சித் திட்டம் (UNDP) மற்றும் காலநிலை தாக்க ஆய்வகம் வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரங்களில் இந்த தகவல்கள் தெரிய வந்துள்ளன.
படிம எரிபொருள்
இதேபோல காலநிலை மாற்றம் தொடர்ந்தால் 2100ம் ஆண்டில், சாலை விபத்தில் ஏற்படும் உயிரிழப்பை விட காலநிலை மாற்றத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் 10 மடங்கு அதிகமாக இருக்கும் என்றும் ஐநா கூறியுள்ளது. அதேபோல அரபு நாடுகளில் அல்சைமர் உள்ளிட்ட நோய்கள் அதிகரிக்கும் என்றும் ஐநா எச்சரித்திருக்கிறது. காலநிலை மாற்றத்திற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படும் கரியமில வாயு உமிழ்வு படிம எரிபொருட்களை பயன்படுத்துவதால்தான் அதிகரிக்கிறது. அதாவது பெட்ரோல், டீசல், நிலக்கரி உள்ளிட்ட எரிபொருட்களை பயன்படுத்துவதால் கரியமில வாயு உமிழப்படுகிறது. இந்த வாயு புவியின் வெப்பத்தை புவியை விட்டு வெளியேற்ற விடாமல் வைத்திருக்கிறது. இதனால் வெப்பநிலை அதிகரிக்கிறது.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல்
உலகம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகள் இயங்க மின்சாரம் இன்றியமையாதது. இந்த மின்சாரத்தை உற்பத்தி செய்ய அனல் மின் நிலையங்கள் பெரிய அளவில் கைகொடுக்கின்றன. அனல்மின் நிலையத்தில் நிலக்கரி எரிக்கப்படுகிறது. எனவே இதனை தவிர்க்க சூரிய ஆற்றலை பயன்படுத்த வேண்டும் என ஐநா வலியுறுத்தியுள்ளது. அதேபோல காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றலிலிருந்து மின்சாரம் தயாரிக்க வேண்டும் என்று ஐநா வலியுறுத்தியுள்ளது. காற்று மாசில் வங்க தேசத்திற்கு அடுத்து இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ள நிலையில் ஐநா வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.