450 சிரிய அகதிகளுடன் இத்தாலி நோக்கி விரையும் சிப்பந்திகளே இல்லாத கப்பல்!
புக்லியா, இத்தாலி: கப்பல் ஊழியர்களோ, பிற சிப்பந்திகளோ இன்றி புக்லியா துறைமுகத்தை நோக்கி 450 சிரியர்களுடன் கப்பல் ஒன்று சென்று கொண்டிருப்பதாக இத்தாலி கடற்படை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு 700 அகதிகளுடன் வந்த கப்பல் ஒன்றை இத்தாலிய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். அக்கப்பலில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் சிரியர்கள். அந்தக் கப்பலிலும் ஊழியர்கள் யாரும் இல்லை. ஆட்டோ பைலட் மூலம் அது இயங்கும் வகையில் சென்று கொண்டிரு்தது. இருப்பினும் இந்தக் கப்பலை கடத்தல்கார்ரகள் சிலர் துருக்கியிலிருந்து செலுத்தி வந்தது பின்னர் தெரிய வந்தது.
இருப்பினும் இந்தக் கப்பலுக்குள் இத்தாலி வீரர்கள், ஹெலிகாப்டர் மூலம் பாராசூட் வழியாக உள்ளே குதித்து கப்பலை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அந்தக் கப்பலில் 60 குழந்தைகளும், 2 கர்ப்பிணிகளும் உட்பட 700 பேர் இருந்தனர். இரண்டு கர்ப்பிணிகளில் ஒருவர் கப்பலிலேயே குழந்தையும் பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில் இதேபோல் தற்போது 450 சிரியர்களுடன் இத்தாலியின் புக்லியா துறைமுகத்தை நோக்கி கப்பல் ஊழியர்களோ, பிற சிப்பந்திகளோ இல்லாமல் கப்பல் ஒன்று பயணித்துக் கொண்டிருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. விரைந்து அக்கப்பலைப் பிடிக்க இத்தாலி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அடிக்கடி இதுபோன்று இத்தாலி கடல் பகுதியில் சட்டவிரோதமாக குடியேற வருவோர், அகதிகள் அடங்கிய கப்பல்கள் வருவது அதிகரித்துள்ளது. இதனால் இத்தாலி கடற்படையினர் தீவிர விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியுள்ளது. ஆனால் இக்கப்பல்களை முறையானோர் செலுத்துவதில்லை என்பதால் உயிரிழப்பு அபாயங்களும், விபத்து அபாயங்களும் அதிக அளவில் உள்ளன.
கடந்த 14 மாதங்களில் மட்டும் இதுபோல வந்த ஒரு லட்.சத்து 70 ஆயிரம் பேரை இத்தாலி படையினர் மீட்டுள்ளனர். இவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.