எலியும் பூனையுமான வெள்ளச்சாமியும், குழந்தைசாமியும் விரைவில் சந்திக்கப் போறாங்களாம்!
அணுஆயுத சோதனையால் எலியும் பூனையுமாக இருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் விரைவில் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
வாஷிங்டன் : வடகொரியாவின் அணு ஆயுத சோதனை மிரட்டல்களால் எலியும் பூனையுமாக இருந்த டொனால்டு ட்ரம்ப், கிம் ஜாங் உன் இருவரிடையேயனோ சந்திப்பு மே மாதத்திற்குள் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலக நாடுகளின் கடும் எதிர்ப்புகளையும் மீறி அணு ஆயுத சோதனை, கண்டம் கண்டம் பாயக்கூடிய ஏவுகணை சோதனை உள்ளிட்டவைகளை நடத்தி உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்துவதை வடகொரியா வாடிக்கையாக வைத்துள்ளது. ஒரே ஒரு பட்டனை அழுத்தினால் போதும் எல்லாம் அவ்வளவு தான் என்று வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன் மிரட்டல் விடுத்து வந்தார்.
வடகொரியாவின் அத்துமீறிய நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ஐநா பல்வேறு பொருளாதார தடைகளை அந்நாட்டுக்கு எதிராக விதித்துள்ளது. அதேபோல், அமெரிக்காவும் வடகொரியாவின் அடாவடி செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இறங்கி வந்த இரு தலைவர்கள்
இந்நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்திக்க கடிதம் அனுப்பி உள்ளார். வடகொரிய அதிபரின் கோரிக்கைக்கு டொனால்டு டிரம்ப் ஒப்புதல் தெரிவித்து இருப்பதாகவும் தென்கொரிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சங் யூயி யோங் தெரிவித்துள்ளார்.
மே மாதத்தில் சந்திக்கின்றனர்
அமெரிக்க அதிபரை சந்தித்து அழைப்பு விடுத்த பிறகு இந்த தகவலை யோங் வெளியிட்டார். வரும் மே மாதத்திற்குள் இரு தலைவர்களின் சந்திப்பு நடைபெறும் என கூறப்படுகிறது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த சந்திப்பு எங்கு நடைபெறும் என்ற தகவல் வெளியாகவில்லை.
தென்கொரியாவின் முயற்சி
வடகொரியாவின் இந்த திடீர் மனமாற்ற முயற்சியை உலக நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் வரவேற்றுள்ளன. அண்மையில், தென் கொரியா பிரநிதிகள் வடகொரிய அதிபரை நேரில் சந்தித்து அணுஆயுத சோதனைகளை கைவிடுவது குறித்து ஆலோசனை நடத்தியது. இதனையடுத்தே வடகொரியா அதிபர் கிம் ஜாங், டொனால்டு ட்ரம்ப்பை சந்திக்க ஒப்பு கொண்டதாக தெரிகிறது.
வரலாற்று சிறப்பு வாய்ந்த சந்திப்பு
வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளால், அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே பல மாதங்களாக அச்சுறுத்தல்கள் நீடித்து வந்தன. இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெறும் இரு தலைவர்களின் சந்திப்பானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.