2 அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு.. என்ன கண்டுபிடிப்புக்காக தெரியுமா?
ஸ்டோக்ஹோம்: 2021ம் ஆண்டுக்கான, மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டெம் ஆகியோருக்கு பகிர்ந்து வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்றைய தினத்தில் இருந்து வருகிற 11ம் தேதி வரை அறிவிக்கப்படும்.
முதலில், 2021ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசை ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் தேர்வுக்குழுவினர் இன்று அறிவித்தனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டெம் ஆகியோருக்கு பகிர்ந்து வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 6 துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. 2021ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்சார் பகுதி
வெப்பம், உடல் வலியை தொடாமல் உணரும் சென்சார் பகுதியை கண்டுபிடித்ததற்காக இவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நோபல் பரிசு கமிட்டி வெளியிட்ட செய்திக்குறிப்பில், டேவிட் ஜூலியஸ், நரம்பில் முனைப் பகுதியிலுள்ள வெப்பத்தை அறியும் சென்சாரை அடையாளம் கண்டுபிடிக்கும் ஆய்வில் வெற்றி பெற்றார். இதற்காக மிளகாய் மிளகு கலவையை அவர் பயன்படுத்தினார்

இரு விஞ்ஞானிகள்
ஆர்டெம் படபூட்டியன், தோல் மற்றும் உள் உறுப்புகளில் இயந்திர தூண்டுதல்களுக்கு எதிர்வினையாற்றும் சென்சார்கள் கண்டுபிடித்தார். இதற்காக அழுத்தம்-உணர்திறன் செல்களை அவர் பயன்படுத்தினார். இந்த கண்டுபிடிப்புகள் தீவிர ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு விதை தூவியுள்ளன.

சிக்கலான இடைவெளி
நமது நரம்பு மண்டலம் வெப்பம், குளிர் மற்றும் இயந்திர தூண்டுதல்களை எவ்வாறு உணர்கிறது என்பதைப் பற்றிய நமது புரிதலிலை அதிகரிக்க இந்த ஆய்வு உதவியுள்ளது. நமது புலன்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையேயான சிக்கலான இடைவெளியைப் பற்றிய புரிதலில் முக்கியமான விஷயங்களை நோபல் பரிசு பெற்ற இவ்விரு விஞ்ஞானிகளும் அடையாளம் கண்டுள்ளனர்.

மனித குல மர்மம்
மனிதகுலம் எதிர்கொள்ளும் ஒரு பெரிய மர்மம் என்னவென்றால், நமது சூழலை நாம் எப்படி உணர்கிறோம் என்ற கேள்விதான். நமது புலன்களுக்கு அடிப்படையான இந்த விஷயங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் ஆர்வத்தைத் தூண்டியுள்ளன. உதாரணமாக, கண்களால் ஒளி எவ்வாறு கண்டறியப்படுகிறது, ஒலி அலைகள் நம் உள் காதுகளில் எவ்வாறு பாதிக்கின்றன, எப்படி வெவ்வேறு ரசாயன கலவைகள் நம் மூக்கு மற்றும் வாயில் உள்ள ஏற்பிகளுடன் தொடர்பு கொள்கின்றன என்பது போன்றவை இதற்கு உதாரணம். நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை உணர வேறு வழிகளும் உள்ளன. வெப்பமான கோடை நாளில் புல்வெளியில் வெறுங்காலுடன் நடப்பதை கற்பனை செய்து பாருங்கள். உங்கள் கால்களுக்கு அடியில் வெயிலின் வெப்பம், காற்றின் அரவணைப்பு மற்றும் தனிப்பட்ட புல் கூர்மையை நீங்கள் உணர முடியும். அதாவது வெவ்வேறு வகை உணர்ச்சிகள் உடலில் வெவ்வேறு பகுதியிலிருந்து உடலுக்குள் கடத்தப்படும். வெப்பநிலை, தொடுதல் மற்றும் இயக்கம் பற்றிய இந்த பதிவுகள் தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும் சூழ்நிலையுடன் நம்மை இணைந்து வாழ வைக்க உதவும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications