இறுதிச் சடங்கில் உயிர் பெற்ற 3 வயது பிலிப்பைன்ஸ் சிறுமி... தற்போது மீண்டும் மரணம்- இணையத்தில் "பரபர"
மணிலா: உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்த 3 வயது சிறுமி, இறுதிச் சடங்கின் போது மீண்டும் உயிர் பெற்று எழுந்த சம்பவம் பிலிப்பைன்சில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. ஆனால் தற்போது அந்த சிறுமி நிஜமாகவே உயிரிழந்து விட்டார்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள அரோரா பகுதியைச் சேர்ந்த 3 வயது சிறுமி காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதை டாக்டர்களும் உறுதி செய்தனர்.
இதையடுத்து அவரது குடும்பத்தார் இறுதிச் சடங்கிற்கு ஏற்பாடு செய்தனர். அப்போது சிறுமியின் உடலில் சிறிய அசைவு ஏற்படுவதைக் கண்டு அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் சிறுமி. அப்போது அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரோடு இருப்பதை உறுதி செய்தனர்.
ஆனால் உயிர் பெற்று எழுந்த சிறுமி மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டு கோமாவுக்குப் போய் விட்டதாகவும், அவர் தற்போது இறந்து விட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிறுமியின் இறுதிச் சடங்கு மற்றும் மீண்டும் அவர் உயிரோடு இருப்பது தொடர்பாக இணையத்தில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ வெளியான இரண்டே நாளில் சுமார் 40 லட்சம் மக்கள் இந்த வீடியோவைக் கண்டு ஆச்சர்யப்பட்டுள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த 79 வயது தாத்தாவும் இப்படித்தான் இறந்து விட்டதாக கூறப்பட்டார். இதையடுத்து அவரை ஒரு பையில் வைத்து கட்ட முயன்றபோது அவர் உயிருடன் மீண்டு அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்தினார். அதேபோல எகிப்து நாட்டில் 28 வயது நபர் ஒருவர் மரணச் சான்றிதழ் எல்லாம் வாங்கி முடித்த பின்னர் , உடலை அடக்கம் செய்யப் போகும் நேரத்தில் எழுந்து வியப்பில் ஆழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
<center><iframe width="100%" height="315" src="//www.youtube.com/embed/01jlRChW_uM" frameborder="0" allowfullscreen></iframe></center>