'பூஸ்டர் டோஸ்.. பூஸ்டர் டோஸ்.. பூஸ்டர் டோஸ்..' ஓமிக்ரானை தடுக்கும் ஒரே வழி.. WHO திட்டவட்டம்
ஜெனீவா: உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஓமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த என்ன வழிகள் உள்ளது என்பது குறித்து உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பியப் பிராந்தியம் புதிய தகவலைத் தெரிவித்துள்ளது.
கடந்த நவ. மாத இறுதியில் தென் ஆப்பிரிக்காவில் புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டது. மற்ற உருமாறிய வைரஸ்களை காட்டிலும் இது வேகமாகப் பரவும் திறன் கொண்டதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
ஏற்கனவே, இதை உலக சுகாதார அமைப்பு கவலைக்குரிய கொரோனா வகையாகப் பட்டியலிட்டுள்ள நிலையில், இது தொடர்பான ஆய்வுகளும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
என்னது வேக்சின் பூஸ்டர் போட்டுக்கிட்டா இவ்வளவு பணமா? நியூயார்க்கில் செம திட்டம்.. ஏன் இப்படி?
ஓமிக்ரான்
ஓமிக்ரான் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த உருமாறிய கொரோனா, மற்ற வகைகளைக் காட்டிலும் அதிகப்படியான மாற்றங்களைக் கொண்டுள்ளது. இதனால் எங்கு இது தடுப்பூசிகளில் இருந்து தப்பும் ஆற்றலைக் கொண்டிருக்கலாம் என்றும் கூட சில ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பியப் பிரிவுக்கு உட்பட்ட 53 நாடுகளில் 38இல் ஏற்கனவே ஓமிக்ரான் கண்டறியப்பட்டுவிட்டது. வரும் காலங்களில் இது மேலும் அதிகரிக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது
பேரபாயம்
இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிராந்தியத்திற்கான தலைவர் டாக்டர் ஹான்ஸ் ஹென்றி பி. க்ளூகே கூறுகையில், "அடுத்த பேரபாயம் நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. வரும் காலங்களில் ஐரோப்பியாவில் உள்ள பல்வேறு நாடுகளிலும் ஓமிக்ரான கேஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இது ஏற்கனவே, கடும் அழுத்தத்தில் உள்ள நமது சுகாதார கட்டமைப்பில் மேலும் அழுத்தத்தை அதிகரிக்கும்" என்றார்.
ஐரோப்பிய பிராந்தியம்
உலகின் எந்த பகுதியைக் காட்டிலும் ஐரோப்பியப் பிராந்தியத்தில் தான் கடந்த வாரம் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. ஓமிக்ரான் கண்டறியும் முன்பே, ஐரோப்பிய நாடுகளில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கிவிட்டது அப்போதே முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கொரோனாவால் அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் மேலும் 7,00,000 பேர் உயிரிழக்கக் கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருந்தது.
பூஸ்ட்.. பூஸ்ட்.. பூஸ்ட்...
ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் தலைமையகம் பூஸ்டர்கள் டோஸ்களை செலுத்துவதற்குப் பதிலாக அனைத்து நாடுகளிலும் உள்ளவர்களுக்கு 2 டோஸ் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனத் தொடர்ந்து தெரிவித்துள்ளது. ஆனால், இதற்கு நேர்மாறாக WHO ஐரோப்பிய பிராந்திய இயக்குநர் டாக்டர் ஹான்ஸ் ஹென்றி கூறுகையில், "பூஸ்ட்.. பூஸ்ட்.. பூஸ்ட் ஓமிக்ரான் கொரோனாவுக்கு எதிராக முக்கிய பாதுகாப்பை அளிப்பது பூஸ்டர் டோஸ் மட்டுமே" என்று குறிப்பிட்டார்.
லேசான பாதிப்பு
டாக்டர் ஹான்ஸ் ஹென்றி இந்த கருத்து குறித்து உலக சுகாதார அமைப்பு இதுவரை எந்தவொரு விளக்கத்தையும் தரவில்லை. ஐரோப்பியாவில் ஏற்பட்டுள்ள ஓமிக்ரான் பாதிப்பில் சுமார் 89% பேருக்கு லேசான பாதிப்பு மட்டுமே ஏற்பட்டுள்ளது. 20 முதல் 40 வயதுடையவர்களுக்கே அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது வெளியே அதிகம் சென்று வேலை செய்பவர்களிடையே தான் அதிகமாக பரவியுள்ளது.
Recommended Video
ஏன் ஆபத்து
ஓமிக்ரான் லேசான பாதிப்பை ஏற்படுத்தினாலும் கூட அது டெல்டாவை காட்டிலும் பல மடங்கு வேகமாகப் பரவுவதாகவே ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் இது மிகப் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து எச்சரித்து வருகிறது. ஓமிக்ரான் அச்சம் காரணமாகக் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் தடை விதிக்குமாறு உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.