"எல்லாத்துக்கும் கடவுள்தான் காரணம்!" சுழன்றடிக்கும் சிக்கலுக்கு நடுவே பாக். நிதியமைச்சர் கூல் பேச்சு
பாகிஸ்தான் பொருளாதாரம் மிகவும் இக்கட்டான சூழலில் உள்ள நிலையில், அதற்கான காரணத்தை அந்நாட்டு நிதியமைச்சர் விளக்கியுள்ளார்.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மிக மோசமான பொருளாதார சிக்கலை எதிர்கொண்டுள்ள நிலையில், நாடு எதிர்கொள்ளும் அனைத்து சவால்களுக்கும் இறைவனே காரணம் என்று பாகிஸ்தான் நிதியமைச்சர் கூறியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
பாகிஸ்தான் இப்போது மிக மோசமான பொருளாதார சிக்கலை எதிர்கொண்டுள்ளது. அங்கு உணவுப் பொருட்கள் தொடங்கி அனைத்து அடிப்படை பொருட்களின் விலைவாசியும் உச்சத்தில் உள்ளது.
அதேபோல அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பும் முன்னெப்போதும் அல்லாத அளவுக்கு மிக மோசமாகச் சரிந்துள்ளது. இதனால் மிகவும் இக்கட்டான நிலையில், பாகிஸ்தான் உள்ளது.
"திவாலாகும் பாகிஸ்தான்?" சுற்றி சுழன்றடிக்கும் சிக்கல்கள்! தயங்கும் உலக நாடுகள்! என்ன தான் நடக்கிறது
பாகிஸ்தான்
இந்த நிலையில், இருந்து மீளப் பாகிஸ்தான் அரசு உலக நாடுகளிடம் உதவி கேட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடமும் உதவி கோரியுள்ளது. இருப்பினும், சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு உதவப் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அதாவது பாகிஸ்தானில் மின்சார கட்டணம், வரிகளை உயர்த்தி வருவாயை அதிகரிக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகளை விதித்து இருந்தன. ஏற்கனவே பொருளாதாரம் மிக மோசமாக உள்ள நிலையில், இதையும் உயர்த்தினால் அந்நாட்டு மக்கள் ஆளும் அரசுக்கு எதிராகக் கொந்தளித்துவிடுவார்கள் என்பதால், பாகிஸ்தான் இதில் தயக்கம் காட்டி வருகின்றது.
கடவுள் தான் காரணம்
இஸ்லாத்தின் பெயரால் நிறுவப்பட்ட ஒரே நாடு பாகிஸ்தான் என்றும் இப்போது எதிர்கொண்டுள்ள நிலை உட்பட அனைத்திற்கும் கடவுள் தான் பொறுப்பு என்றும் நிதியமைச்சர் இஷாக் தர் தெரிவித்துள்ளார். அங்கு கிரீன் லைன் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையின் தொடக்க விழாவில் உரையாற்றிய அவர், "இஸ்லாத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னேறும் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இறைவனால் பாகிஸ்தானை உருவாக்க முடியும் என்றால், அவரால் அதைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும், செழிக்க வைக்கவும் முடியும். இப்போதுள்ள நிலை உட்பட அனைத்திற்கும் இறைவனே காரணம்.
இரவும் பகலும் உழைக்கிறோம்
பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் அரசு நாட்டை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முந்தைய இம்ரான் கான் அரசால் தற்போதைய அரசுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள் உருவாகியுள்ளது. அதைச் சரி செய்யவே இப்போது இரவும் பகலும் உழைத்து வருகிறோம். தேர்தலுக்கு முன்னதாக நிலைமையை மேம்படுத்த முயல்கிறோம். 5 ஆண்டுகளுக்கு முன்பு (இம்ரான் கான் ஆட்சிக்கு வந்தது) தொடங்கிய நாடகத்தால் நாடு இன்னும் பாதிக்கப்பட்டு வருகிறது. 2013-2017 வரை முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் ஆட்சிக் காலத்தில் பொருளாதாரம் வலுவாகவே இருந்தது..
நவாஸ் ஷெரீப்
நவாஸ் ஷெரீப்பின் காலத்தில் பாகிஸ்தான் பங்குச் சந்தையானது தெற்காசியாவில் மிகச் சிறப்பாகச் செயல்படும் சந்தையாகவும், உலக அளவில் ஐந்தாவது இடத்திலும் இருந்தது. முந்தைய அரசுகளால் ஏற்படுத்திய பிரச்சினையால் தான் நாம் இந்த இடத்தில் உள்ளோம். நவாஸ் ஆட்சிக் காலத்தில் பாகிஸ்தான் வளர்ச்சிப் பாதையில் இருந்தது, ஆனால் இப்போது தடம் புரண்டுவிட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடு சந்தித்த அழிவுகளை மக்கள் பார்க்க முடியும். இதற்கு யார் காரணம் என்பதும் மக்களுக்கு நிச்சயம் புரியும்" என்று அவர் தெரிவித்தார்.
உதவி தேவை
மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கும் பாகிஸ்தானுக்கு வெளிநாடுகளின் உதவி இப்போது கட்டாயம் தேவை என்ற நிலை உருவாகியுள்ளது. 3 வாரங்களுக்கும் தேவையான அந்நியச் செலாவணி மட்டுமே அவர்கள் கையிருப்பில் உள்ளது. அவர்களிடம் 923 மில்லியன் டாலரில் இருந்து முதல் 3.68 பில்லியன் டாலர் வரை சரிந்தது. கடந்த 2019இல் 6 பில்லியன் டாலர், அதைத்தொடர்ந்து 2022இல் வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவில் இருந்து தப்ப மற்றொரு 1.1 பில்லியன் டாலர்களை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெற்றது. இத்தனை உதவிகளைப் பெற்றாலும் கூட பாகிஸ்தான் நிதிநிலை இன்னுமே கூட சீராகவில்லை.
பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 200க்கு கீழ் சென்றால், அவர்களுக்குச் சற்று நிம்மதியைத் தரும். இருப்பினும், பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு 268க்கு சரிந்துள்ளது. இந்த இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 36 ரூபாய் வரை பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது. இதனால் அங்கு விலைவாசி தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பாகிஸ்தான் திவால் ஆகும் நிலைக்குக் கூட தள்ளப்படலாம் என்று சிலர் எச்சரிக்கின்றனர்.