கத்தாருடன் 'அன்னம் தண்ணி புழங்காத' அரபு நாடுகள்.. திடீர் முடிவுக்கு பின்னணி என்ன?
ரியாத்: கத்தாருடனான ராஜாங்க உறவுகளை சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் துண்டிப்பதாக அறிவித்துள்ளன.
இஸ்லாமிய மத அடிப்படைவாத தீவிரவாத குழுக்களுக்கு கத்தார் உதவுவதாக குற்றம்சாட்டி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளன, இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக வாழும் அரபு நாடுகள்.
அண்டை நாடான கத்தாரை திடீரென புறக்கணிக்க இவர்களுக்கு ஏன் தேவை வந்தது என்ற கேள்வி உலகை துரத்திக் கொண்டுள்ளது. இதற்கு தீவிரவாத நடவடிக்கைகளுக்கு கத்தார் ஆதரவு அளித்தது என்ற ஒற்றை விடையை அளிக்க முடியும் என்றாலும் பின்னணியில் வேறு சில விவகாரங்களும் உள்ளன.
ரொம்ப நாள் மோதல்
அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பரிமாற்றங்கள் லீக்காகின. சர்ச்சைக்குரிய அந்த இ-மெயில்களை கத்தார் அரசு வெப்சைட்டுகள் வெளியிட்டன. இதனால் கடும் கோபமடைந்தன அரபு நாடுகள். ஆனால் செய்தி வெப்சைட் ஒன்று ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக அந்த நாட்டு அரசு சமீபத்தில் அறிவித்தது. ஈரான் மற்றும் இஸ்ரேல் குறித்து கூறிய கருத்துக்கள் போலியாக அந்த செய்தி நிறுவனத்தில் வெளியிடப்பட்டுவிட்டதாகவும் கூறியிருந்தது. ஆனால், கோபமடைந்த அண்டை அரபு நாடுகள், கத்தார் மீடியாவை தங்கள் நாட்டில் தடை செய்தது. தலைநகர் தோகாவில் இருந்து இயங்கிவரும் அல்-ஜசீரா செய்தி சேனலையும் அரபு நாடுகள் தடை செய்தன.
முஸ்லிம் சகோதர அமைப்பு
கத்தார் எமிர் (மன்னர்) தமிம் பின் ஹமத் அல் தனி, ஈரான் பிரதமர் ஹசன் ரௌகானியுடன் நெருக்கம் காட்டியது பிற அண்டை நாடுகளுக்கு பிடிக்கவில்லை. எகிப்தின் முன்னாள் அதிபர் முகமது மொர்சி, முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை சேர்ந்தவர். இந்த அமைப்பை அரபு எமிரேட்ஸ் நாடுகள் மமற்றும் சவுதி அரேபியா எதிர்த்து வருகிறது. ஆனால் கத்தாரோ, முகமது மொர்சியுடன் நெருக்கம் காட்டியது.
தூதர்களை திரும்ப பெற்றன
2014ம் ஆண்டு சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பக்ரைன் நாடுகள், கத்தாருக்கான தங்களது தூதர்களை திரும்ப பெற்றுக்கொண்டு எதிர்ப்பை பதிவு செய்தன. 8 மாதங்கள் கழித்து, தங்கள் தூதர்களை கத்தாருக்கு அவை திருப்பியனுப்பின. காரணம், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை சேர்ந்த சிலரை தங்ககள் நாட்டை விட்டு கத்தார் வெளியேற்றியது. ஆனாலும், கத்தார் மீண்டும் பழைய வேலைகளைத்தான் ஆரம்பித்தது.
தீவிரவாத குழுக்களுக்கு நிதி
மேற்கத்திய நாடுகள் கத்தாரை இந்த ஒரு விஷயத்தில் குற்றம்சாட்டியபடியேதான் உள்ளன. அது, அல்கொய்தா உள்ளிட்ட சிரியாவில் போரிடும் பயங்கரவாத குழுக்களுக்கு கத்தார் நிதி உதவி செய்து வருகிறது என்பதுதான். இதை கத்தார் மறது்து வருகிறது. ஆனால் ஹமாஸ் உள்ளிட்ட அமைப்புகளுக்கு கத்தார் நிதி உதவி செய்ததற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன.