பிரவுசிங் சென்டரில் 'டெலிவரி'... பெற்று விட்டு மீண்டும் ஆன்லைனில் கேம்ஸ் ஆடிய சீனப் பெண்!
பெய்ஜிங்: சீனாவில் இளம்பெண் ஒருவர் இன்டர்நெட் மையத்தில் குழந்தையை பெற்றெடுத்துவிட்டு ஆன்லைனில் கேம் விளையாடியது பலரையும் வியக்க வைத்துள்ளது.
சீனாவில் உள்ள ஷான்டோங் மாகாணத்தைச் சேர்ந்த 24 வயது நிறைமாத கர்ப்பிணி ஒருவர் தனது குடும்பத்தாருடன் திங்கட்கிழமை தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் வீட்டை விட்டு வெளியேறி இன்டர்நெட் மையத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் தனது காதலருக்காக காத்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது அவர் ஆன்லைனில் கேம்ஸ் விளையாடியுள்ளார்.

விளையாடிக் கொண்டிருக்கையில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அவர் அமர்ந்த அறையில் இருந்து குழந்தை அழும் சப்தம் கேட்டு பிறர் ஓடி வந்து பார்த்தபோது தரையில் குழந்தை இருந்தது. உடனே அங்கிருந்தவர்கள் அந்த பெண்ணுக்கு சுத்தம் செய்ய வெந்நீர் அளித்துள்ளனர். அவரோ வெந்நீர் வேண்டாம் என்று கூறி மீண்டும் கேம்ஸ் விளையாடத் தொடங்கினார்.
தரையில் ரத்தக்கறையுடன் கிடந்த குழந்தையை அங்கிருந்தவர்கள் எடுத்து சுத்தம் செய்து ஒரு துணியை போர்த்திவிட்டு ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த பெண் ஆம்புலன்ஸ் வரும் வரை ஆன்லைன் கேம்ஸ் விளையாடிக் கொண்டிருந்தார்.
ஆம்புலன்ஸ் வந்ததும் ஸ்ட்ரெட்சரில் ஏற மறுத்து அந்த பெண் நடந்து சென்று வாகனத்தில் ஏறினார். மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்த அவரது குடும்பத்தாரும், காதலரும் அங்கு வந்து தாயையும், சேயையும் பார்த்தனர்.












Click it and Unblock the Notifications