உலகிலேயே முதன்முறையாக.. வழக்கறிஞராக வாதாடக் களமிறங்கும் ரோபோ.. என்ன வழக்கு தெரியுமா?
உலகிலேயே முதன்முறையாக நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இயந்திர மனிதன் வாதாடப் போவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கலிபோர்னியா: உலகிலேயே முதன்முறையாக, அமெரிக்காவில் வழக்கு விசாரணை ஒன்றில் ரோபோட் ஒன்று வழக்கறிஞராக வாதாட இருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியால், சாத்தியமேயில்லை என பட்டியலிடப்படுபவைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. அறிவியல் புனைவு நாவல்களில் படிப்பது போல், கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்களின் இடத்தை, அவர்களின் தொழில்களை இயந்திர மனிதர்கள் செய்யத் தொடங்கி விட்டனர்.
ஏற்கனவே, மனிதர்கள் செய்யும் பல்வேறு செயல்களை அவர்களைவிடச் சிறப்பாகச் செய்யும் இயந்திர மனிதர்களை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். தற்போது அதன் ஒருகட்டமாக மனிதர்களுக்கு இணையாக நீதிமன்றப் படிகள் ஏறி, வழக்கு ஒன்றில் வாதாட இருக்கிறது ரோபோட் ஒன்று.

ரோபோ வழக்கறிஞர்
டோனோபே (DoNoPay) என்ற நிறுவனத்தின் மென்பொருளை அடிப்படையாகக் கொண்டு அந்த ரோபோட் வழக்கறிஞராக செயல்பட இருக்கிறது. நியூயார்க் போஸ்ட் தகவலின்படி, இந்த ரோபோட் போக்குவரத்துக் குற்றத்துக்கான வழக்கு விசாரணையில் வாதாட இருப்பதாக தெரிய வந்துள்ளது. பொருளாதார வசதியில்லாதவர்களுக்கு இலவசமாகச் சட்டச் சேவைகளை வழங்குவதற்காக இந்த ரோபோட் செயல்படும் எனக் கூறப்படுகிறது.

டோனோபே நிறுவனம்
2015ல் கலிபோர்னியாவைச் சேர்ந்த ஜோஷுவா பிரவ்டர் என்பவர் தோற்றுவித்ததுதான் இந்த டோனோபே நிறுவனம். அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் (Stanford) பல்கலைக்கழகத்தில் பயின்ற காலத்தில் போக்குவரத்து அபராதங்களைத் தவிர்ப்பதில் வல்லுநரானதாகத் தன்னைக் குறிப்பிட்டுக் கொள்ளும் ஜோஷுவா, அதன் மூலமாக டோனோபே நிறுவனத்தைத் தற்செயலாக அமைத்ததாகக் கூறுகிறார்.

ஸ்மார்ட்போன் ஆப்
அடுத்த மாதத்தில் இருந்து நீதிமன்றத்தில் குற்றவழக்குகளை இந்த ரோபோட் கண்காணிக்க இருக்கிறது. வழக்கறிஞர் அளிக்கும் அனைத்து சட்டரீதியான தகவல்களையும் இந்த ரோபோட்டும் கொடுக்கும் வகையில் அதனை உருவாக்கியுள்ளனர். எதிர்தரப்பின் மொத்த வாதங்களையும் கவனித்து, பின்னர் அதற்குத் தேவையான பிரதி வாதங்களை ஸ்மார்ட்போன் ஆப் மூலம் இந்த ரோபோட்டானது வெளிப்படுத்தும்.

உலகிலேயே முதன்முறை
ஏற்கனவே இதே மாதிரி ரோபோட் தொழில்நுட்பம் சீனாவிலும் உள்ளது எனக் கூறப்படுகிறது. ஆனாலும், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த ரோபோட்தான், உலகின் முதல் இயந்திர வழக்கஞர் என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. 2015ல் உருவாக்கப்பட்ட இந்த ரோபோட் பார்க்கிங் டிக்கட் வழக்குகளை பார்க்க உபயோகிப்பட்டுள்ளது.

சலசலப்பு
உலகிலேயே முதன்முறையாக வழக்கறிஞராக ஒரு ரோபோட் வாதாட போகிறது என்ற செய்தி ஆச்சர்யத்தை ஏற்படுத்தினாலும், மற்ற வழக்கறிஞர்கள் மத்தியில் இது சலசலப்பையே உருவாக்கியுள்ளது. மனிதனைவிட இது சிறப்பாக செயல்படும் என்பதால், எதிர்காலத்தில் இத்தகைய ரோபோட் வழக்கறிஞர்களை, நிஜ வழக்கறிஞர்கள் எதிர்கொள்வது மிகவும் சவாலானதாகவே இருக்கும் எனக் கருதப்படுகிறது.

எச்சரிக்கை
'திறமைசாலியான வழக்கறிஞர்களிடம் இந்த ரோபோட் வழக்கறிஞர் தோற்றுப் போகலாம். அப்படித் தோற்றுப் போகும் சூழ்நிலையில் நீதிமன்றம் விதிக்கும் அபராதங்களையும் செலுத்த நாங்கள் தயார்' என அதனைக் கண்டுபிடித்த ஜோஷுவா கூறியுள்ளார். ஆனாலும், 'அதற்கு வாய்ப்புகள் குறைவு, எதிர்காலத்தில் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களின் இடத்தை நிரப்புவதற்கே வாய்ப்புகள் அதிகம்' என எச்சரிக்கின்றனர் வல்லுநர்கள்.

தவிர்க்க முடியாத அச்சம்
எது எப்படியோ, இப்படியான கண்டுபிடிப்புகள் நமது அறிவியலின் வளர்ச்சி என ஒருபுறம் நாம் மார் தட்டிக் கொண்டாலும், மற்றொருபுறம் இது எங்கே போய் முடியுமோ என்ற அச்சமும் இது போன்ற தருணங்களில் தவிர்க்க இயலாததாகி விடுகிறது. உலகமே இனி இயந்திர மையம் தான் என்ற வாக்கு நிஜமாவது ரொம்ப தூரத்தில் இல்லை.












Click it and Unblock the Notifications