உலகின் மிக வயதான பாண்டா கரடி மரணம்.. வயசு 38 தான்.. ஆனால் மனிதர்களோடு ஒப்பிட்டால் 110
சீனாவில் வாழ்ந்து வந்த உலகின் மிக வயதான பாண்டா கரடி உயிரிழந்தது.
பீஜிங்: சீனாவில் வாழ்ந்து வந்த உலகின் மிக வயதான பாண்டா கரடி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் உள்ள பாக்ஸிங் கவுண்டி.எனும் வனப் பகுதியில் கடந்த 1982ம் ஆண்டு பிறந்தது ஜின்க்சிங் எனும் பாண்டா கரடி. இந்த கரடிக்கு ஒரு வயது இருக்கும் போது சாங்குவிங் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டது. கடந்த 37 ஆண்டுகளாக இந்த உயிரியல் பூங்காவில் தான் ஜின்க்சிங் வாழ்ந்து வந்தது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே ஜின்க்சிங்கின் உடல் நிலை மோசமடைய தொடங்கியது. கடந்த அக்டோபர் 21ம் தேதி ஜின்க்சிங் கரடிக்கு மயக்கமடைந்து விழுந்தது. அதன் எடையும் வெகுவாக குறைய தொடங்கியது. மேலும் மூச்சுத்திணறல், இருமல், வயிற்றில் தொற்று, மலம் கழிப்பதில் சிக்கல் என பல வகையான பிரச்சினைகள் அதற்கு ஏற்பட்டது.
ஜின்க்சிங்கை காப்பாற்ற சீனாவில் உள்ள பிரபல மருத்துவர்கள் பலரும் கடும் முயற்சி செய்தனர். அலோபதி, சீன பாரம்பரிய வைத்தியம் என பல்வேறு சிகிச்சைகள் அதற்கு தொடர்ந்து அளிக்கப்பட்டன. ஆனால் அவை எதுவும் பயனளிக்கவில்லை. ஜின்க்சிங்கின் உடல் உறுப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக செயலிழக்க தொடங்கின.
இந்நிலையில் கடந்த 8ம் தேதி ஜின்க்சிங்கின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் ஜின்க்சிங் உயிரிழந்தது.
உலகின் மிக வயதான பாண்டா கரடி ஜின்க்சிங் தான். அதன் வயது 38. மனிதர்களின் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்தால், அதற்கு தற்போது 110 வயதாகி இருக்கும் கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.