நம்மூர் ‘முதல்வன்’ ஸ்டைலில்... ஒருநாள் போலீஸான ரத்தப் புற்றுநோய் பாதித்த 9 வயது சிறுவன்
டெட்ராய்ட்: உலக புற்றுநோய் தினத்தையொட்டி, நேற்று டெட்ராய்ட் காவல்துறை ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ஒரு நாள் காவல்துறை ஆணையர் பதவி கொடுத்து அவனது கனவை நனவாக்கியுள்ளது.
நேற்று உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப் பட்டது. எனவே, புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அமெரிக்காவின் டெட்ராய்ட் காவல்துறை ஒரு திட்டமிட்டது.
அதன்படி, புற்றுநோயால் பாதிக்கப் பட்ட 9 வயது சிறுவன் ஒருவனை ஒருநாள் காவல் அதிகாரியாக நியமித்தது.
போலீஸ் கனவு...
அமெரிக்காவின் டெட்ராய்ட் பகுதியைச் சேர்ந்த ஜோவான் ஃபெல்டன் என்ற 9 வயது சிறுவன் லிம்ஃபோபிலாஸ்டிக் லுக்கோமியா என்ற ரத்த புற்றுநோயால் பாதிக்கப் பட்டிருந்தான். வலியின் வேதனையிலும், மரண பயத்திலும் தனது வாழ்நாளை கழித்து வரும் ஃபெல்டனுக்கு, தான் வளர்ந்து பெரியவனாகி, போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவு உள்ளதாக கூறப்படுகிறது.
விழிப்புணர்வு...
சிறுவனின் கனவு மருத்துவர்கள் மூலம் அந்நகரப் போலீசாரின் காதுகளை எட்டியுள்ளது. எனவே, புற்றுநோய் தினத்தில் அச்சிறுவனின் கனவை நிறைவேற்ற காவல்துறை முடிவு செய்தது.
சல்யூட் வரவேற்பு....
அதன்படி, நேற்று காலை அவனுக்காக பிரத்யேகமாக தைக்கப்பட்ட போலீஸ் சீருடையை மருத்துவர்கள் குழு கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து ஃபெல்டனை வாகனத்தில் ஏற்றி, டெட்ராய்ட் நகர காவல்துறை தலைமை அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு, அனைத்து காவலர்களும் சல்யூட் அடித்து ஃபெல்டனை வரவேற்றுள்ளனர்.
ஒருநாள் போலீஸ்....
இன்று ஒரு நாள் மட்டும் டெட்ராய்ட் நகர போலீஸ் தலைமை அதிகாரியாக பதவியேற்றுக் கொள்கிறேன் என்று ஃபெல்டன் உறுதி மொழி எடுத்துக் கொண்டு, அன்றைய பணிகளை, சக காவலர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளான்.
ரொம்ப சந்தோஷம்ங்க....
‘காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்ற தனது கனவு, இதன் மூலம் நிறைவேறியது என்றும், மகிழ்ச்சியில் திளைத்திருந்த போது, உடல் நலம் தேறி அடுத்த ஆண்டிலாவது பள்ளிக்குச் செல்ல விரும்புவதாகத் தெரிவித்துள்ளான் ஃபெல்டன்.