காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் கோபுரத்தில் இடி தாக்கியது.. அபசகுணம்? பக்தர்கள் கவலை
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் தெற்கு கோபுரத்தில் இடி தாக்கியதில் கோபுரத்தின் உச்சியில் உள்ள யாளியின் ஒரு பகுதி உருவம் உடைந்து கீழே விழுந்துள்ளது.
காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலையில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
மாலை வேளையில் பெய்த மழையின்போது உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் உள்ள தெற்கு கோபுரத்தில் திடீரென இடி தாக்கி பயங்கர சத்தம் கேட்டுள்ளது.

யாளி உடைந்து விழுந்துள்ளது
கோவிலின் கோபுர உச்சியில் இடி தாக்கியதில் உச்சியிலுள்ள யாளியின் ஒரு பகுதி உடைந்து கீழே விழுந்தது. கோவிலில் உள்பிரகாரம் பக்தர்கள் யாரும் அனுமதிக்காத நிலையில்,தெற்கு கோபுர வெளி வாசலில் மழைக்காக பொதுமக்கள் சிலர் ஒதுங்கி இருந்தனர்.

மக்களுக்கு ஆபத்தில்லை
மக்கள் வெளியே ஒதுங்கி நின்றபோதுதான் கோபுர உச்சியிலிருந்து யாளியின் ஒரு பகுதி உடைந்து விழுந்தது. இருப்பினும், நல்லவேளையாக அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை.

பக்தர்கள் கவலை
இடி தாக்கிய தெற்கு கோபுரத்தில் இடிதாங்கி அமைக்கப்படாமல் இருந்துள்ளது. இதுவரை எப்போதும் இல்லாத வகையில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் கோபுரத்தின் மீது இடி விழுந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பரிகார பூஜைகள்
கொரோனா நோய் பரவல் பாதிப்பு காரணமாக மக்கள் பலரும் அவதிப்பட்டு வருகிறார்கள். கோவில்கள் பக்தர்களின் தரிசனத்திற்காக நடை திறக்கப்படாமல் இருந்தது. சமீபத்தில்தான் நடை திறக்கப்பட ஆரம்பித்துள்ளது. மூன்றாவது அலை பரவுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகுவதால், மக்கள் பீதியில் உள்ளனர். இந்தநிலையில்தான் இதுபோன்ற சம்பவம் பக்தர்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பரிகார பூஜை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை பக்தர்களிடம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications