மாமியார் பேச்சை கேட்காதே! வயிறு எரியுது! பிள்ளைகளுக்கு தமிழ் பெயர் வைங்க! அமைச்சர் அன்பரசன் உருக்கம்!
காஞ்சிபுரம்: பிள்ளைகளுக்கு தமிழ் பெயர்களை வைக்க வேண்டும் என பெற்றோர்களுக்கு உருக்கமுடன் வேண்டுகோள் விடுத்துள்ளார் அமைச்சர் தாமோ அன்பரசன்.
பெரும்பாலானோர் பிள்ளைகளுக்கு தமிழ் பெயர்களை சூட்ட முன்வராததை நினைக்கும் போது தனக்கு வயிறு எரிவதாகவும் வேதனைத் தெரிவித்தார்.
போகிற போக்கை பார்த்தால் நாளடைவில் தமிழ் பெயர்களே மறைந்துவிடுமோ என அச்சம் இருப்பதாக அமைச்சர் தாமோ அன்பரசன் தெரிவித்துள்ளார்.
செக் குடியரசு நாட்டில் ஸ்டைலாக அமைச்சர் தாமோ அன்பரசன்! முதலீட்டாளர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிப்பு!
தமிழ் மொழி
சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தாமோ அன்பரசனை பொறுத்தவரை தமிழ் மொழி மீது தீராத பற்றும் பாசமும் கொண்டவர். தங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு தமிழில் பெயர்களை சூட்டியிருப்பதோடு தன்னை பெயர் வைக்குமாறு கட்சியினர் அழைத்தால் அவர்கள் வீட்டு பிள்ளைகளுக்கும் அழகான தமிழ் பெயர்களை மட்டுமே சூட்டக்கூடியவர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பிள்ளைகளுக்கு தமிழ் பெயர்களை வைக்க வேண்டும் என பெற்றோர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாமியார் பேச்சு
தமிழ் பெயர்கள் வைக்கும் விவகாரத்தில் மாமியார் பேச்சு, ஜாதககாரர் பேச்சு, என யார் பேச்சையும் கேட்க வேண்டாம் என்றும் தமிழில் எத்தனையோ அழகான பெயர்கள் இருப்பதாகவும் எடுத்துக் கூறினார். பெரும்பாலானோர் பிள்ளைகளுக்கு தமிழ் பெயர்களை சூட்ட முன்வராததை நினைக்கும் போது தனக்கு வயிறு எரிவதாகவும் வேதனைத் தெரிவித்தார்.
அமைச்சர் வேண்டுகோள்
அண்மையில் கூட தாம் பங்கேற்ற பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் 50 மாணவர்களிடம் பெயர்களை கேட்டபோது அதில் 4 மாணவர்கள் பெயர்கள் மட்டுமே தமிழில் இருந்ததாகவும் மற்ற பெயர்கள் எல்லாம் மற்ற மொழிகளில் இருந்து வைக்கப்பட்டிருந்தது எனவும் கவலை தெரிவித்தார் அமைச்சர் தாமோ அன்பரசன். தமிழ் பெயர்களை மாற்று மொழிகளின் ஆக்கிரமிப்பால் அழிய விட்டுவிடக் கூடாது என உருக்கமுடன் பெற்றோர்களுக்கு கோரிக்கை விடுத்த அவர் தமிழின் அருமை பெருமைகளை எடுத்துக் கூறினார்.
ஸ்டாலின் அறிவுரை
இதனிடையே திமுக நிர்வாகிகளின் இல்ல மண விழாக்களை தலைமை தாங்கி நடத்தி வைக்கும் போது மணமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கும் முக்கிய அறிவுரைகளில் ஒன்று, பிள்ளைகளுக்கு தமிழ் பெயர்களை சூட்டுங்கள் என்பதேயாகும். அமைச்சர் தாமோ அன்பரசன் விடுத்துள்ள இந்தக் கோரிக்கை காலத்தின் அவசியம் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.