தமிழ்த்தாய் வாழ்த்தில் ஒரு வரியை மாற்றணும்.. "என் இனிய தமிழ் மக்களே ஏன்?".. ரகசியம் உடைத்த பாரதிராஜா
தமிழ்த் தாய் வாழ்த்தில் ஒரு வரியை மாற்ற பாரதிராஜா கோரிக்கை
கன்னியாகுமரி: தமிழ்த் தாய் வாழ்த்தில் ஒரு வரியை மட்டும் மாற்ற வேண்டும் என இயக்குநர் பாரதி ராஜா, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தண்டம் அருகே நாட்டலாம் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற கலை இலக்கிய விழாவில் இயக்குநர் பாரதிராஜா கலந்து கொண்டார்.
அவர் பேசுகையில் இந்த நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடுவதில் எனக்கு ஒரு சின்ன வருத்தம் உள்ளது. அந்த தமிழ்த்தாய் வாழ்த்தில் வரும் "எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழணங்கே" என்ற ஒரு வரிவரும்.
எப்போதும் செல்போனா? ஒழுங்கா சமையல் செய்ய கத்துக்கோ! அதட்டிய தாய்.. கல்யாண பெண் எடுத்த விபரீத முடிவு!
எத்திசையும் புகழ் மணக்க
இதை பாடும் போது எத்திசையும் புகழ் மணக்க இருந்த தமிழ் இப்போ இல்லையா என்ற கேள்வியை எழுப்புகிறது. எத்திசையும் புகழ் மணக்க இருக்கின்ற தமிழே என அந்த வரியை மாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். நான் கையை தலைமீது உயர்த்தி கும்பிடுவதுதான் என அடையாளம். இதற்கு ஒரு காரணம் உண்டு.
கோபுரங்கள்
தமிழக கோவில் கோபுரங்கள் அப்படித்தான் இருக்கும். ரசிகர்களாகிய நீங்கள் எல்லாம் கோயில் போன்றவர்கள். எனவேதான் நான் என் இனிய தமிழ் மக்களே என சொல்லி கைகளை மேல் உயர்த்தி வணங்குகிறேன். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தமிழ்த் தாய் வாழ்த்தை மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை எழுதியிருந்தார்.
மனோன்மணீயம் நூல்
இது 1891 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்ட புகழ் பெற்ற நாடக நூலான மனோன்மணீயம் நூலில் உள்ள பாயிரத்தில் தமிழ்த் தெய்வ வணக்கம் எனும் தலைப்பிலுள்ள ஒரு பகுதிதான் இந்த தமிழ்த்தாய் வாழ்த்தாகும். தமிழகத்தின் அனைத்து விழாக்களிலும் இந்த நீராரும் கடலுடுத்த என்ற பாடலைப் பாட வேண்டும் என்ற கோரிக்கை அப்போது வலுத்தது. இதையடுத்து 1967 ஆம் ஆண்டு சென்னை மாநில சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சியமைத்தது.
முதல்வராக பதவியேற்ற அண்ணாதுரை
அப்போது தமிழகத்தின் முதல்வராக அண்ணாதுரை பொறுப்பேற்றார். அப்போது தமிழகத்தின் பள்ளி, கல்லூரிகளில் தமிழ்த் தாய் வாழ்த்து பாட வேண்டும் என பரிந்துரைத்தார். ஆனால் இந்த பாடலை அரசு பூர்வமாக அறிவிக்க இருந்த போது அண்ணாதுரை 1969 ஆம் ஆண்டு அண்ணா காலமானார். இதன் பிறகு கருணாநிதி முதல்வராக பதவியேற்றவுடன் இந்த பாடலை 1970 இல் தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தார். அதன் பின்னர் 2021 ஆம் ஆண்டு முதல்வர் ஸ்டாலின் தமிழக அரசின் மாநில பாடலாக தமிழ்த் தாய் வாழ்த்தை அறிவித்தார். இது அரசாணையில் இடம்பெற்றது. எனவே தமிழகத்தில் அனைத்து கல்வி நிலையங்களிலும் பொதுத் துறை நிறுவனங்களிலும் விழாக்களின் போது இந்த பாடலை தொடக்கத்தில் பாட வேண்டும். இதற்கு அனைவரும் எழுந்து நிற்க வேண்டும். ஆனால் மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்க விலக்கு. இந்த பாடலை 55 வினாடிகளில் முல்லைப்பாணி பண்ணில் பாட வேண்டும்.
இந்த பாடலின் முழு வரிகள் இவை:
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!
உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!
இவ்வாறாக இந்த பாடல் அமைந்துள்ளது. இந்த பாடலில்தான் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என பாரதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.