மனித ரத்தத்திற்கு பதிலாக கோழி ரத்தம்! லாரி டிரைவர் போட்ட கிரிமினல் பிளான்.. அதிர்ந்துபோன போலீசார்!
கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே நடந்த சாலை விபத்தில் கேபிள் ஆப்ரேட்டர் உயிரிழந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக வெளியாகியுள்ள சிசிடிவி வீடியோ பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அமைந்துள்ள கணியான் குளம் பகுதியில் வசித்து வந்தவர் தாணுமலயா பெருமாள். கேபிள் ஆப்ரேட்டரான இவர் கடந்த சனிக்கிழமை தனது நண்பருடன் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அவர்கள் இருவரும் டூ வீலரில் தக்கலைப் பகுதியில் இருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். இருவரும் சுங்கான்கடை அருகே வந்த போது பின்னால் வந்த லாரி மோதியுள்ளது.
லாரி மோதி விபத்து: தாணுமலயா பெருமாள் வாகனம் மீது மோதிய அந்த லாரி நிற்காமல் அப்படியே சென்றுவிட்டது. லாரி மோதியதில் இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இதில் தாணுமலயா பெருமாள் லாரிக்கு அடியில் சிக்கிய நிலையில், அவர் லாரி சக்கரம் ஏறியதில் உடல் நசுங்கி உயிரிழந்தார். இதில் படுகாயமடைந்த அவரது நண்பர் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இது குறித்து இரணியல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்,
விபத்தை ஏற்படுத்தி லாரியுடன் தலைமறைவான மில்டன் என்பவரை இரணியல் போலீசார் தேடி வந்தனர். இதற்கிடையே லாரியுடன் இரணியல் காவல் நிலையத்திற்கு வந்த மில்டன் போலீசாரிடம் சரணடைந்தார். அப்போது லாரியின் இடதுபுற டையரிலும் லாரியின் அடிப்பக்கத்திலும் ரத்தம் இருந்துள்ளது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீஸ், மில்டன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே விபத்து தொடர்பான காட்சிகள் வெளியானது. அதில் பகீர் திருப்பம் ஏற்பட்டது.
"விபத்துகளின் தலைநகராக மாறும் கோவை.." சென்னையை விட ரொம்பவே மோசம்.. உச்சத்தில் சாலை விபத்துகள்! பகீர்
பகீர் சம்பவம்: அதாவது உயிரிழந்த உறவினர், விபத்து நடத்திய லாரி வேறு.. ஆனால் வேறு ஒரு லாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிசிடிவி கேமரா ஆதாரத்துடன் குளைச்சல் ஏஎஸ்பி அலுவலகத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளனர். இதையடுத்து இந்த விபத்து தொடர்பாக விசாரிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டது. இதையடுத்து தனிப்படை போலீசார் மில்டனிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
கோழி ரத்தம்: அதில் தான் சில பகீர் தகவல்கள் தெரிய வந்துள்ளது.. அதாவது விபத்தை ஏற்படுத்திய லாரிக்கு காப்பீடு, சாலை வரி உள்ளிட்ட ஆவணங்கள் இல்லை.. இதனால் அதை மறைத்து, உரிய ஆவணங்கள் இருக்கும் வேறு ஒரு லாரியை போலீஸ் நிலையத்திற்கு எடுத்து வந்துள்ளனர். இந்த லாரி தான் விபத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பது போலக் காட்ட லாரியின் டையர் உள்ளிட்ட பகுதிகளில் கோழி ரத்தத்தையும் தெளித்துள்ளனர்.
உண்மையைக் கண்டறிந்த போலீசார், உண்மையில் விபத்தை ஏற்படுத்திய லாரி எங்கே உள்ளது என்பதை மில்டனிடம் கேட்டு தெரிந்து கொண்டனர். இதையடுத்து இரண்டு லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். ஓட்டுநர் மில்டன், லாரி உரிமையாளர் ஜார்ஜ் ஆண்டனி ஆகியோர் மீது தவறான தகவல் அளித்தது, ஆதாரங்களை மறைத்தது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், தலைமறைவான உரிமையாளர் ஜார்ஜ்ஜை இப்போது போலீசார் தேடி வருகின்றனர். விரைவில் அவரையும் கைது செய்வோம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications