மூட நம்பிக்கை! 'குளிர்பானத்தில் திராவகம் கலந்து கொன்னுட்டாங்க'.. மகனின் காதலி மீது தந்தை புகார்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே வயிற்று வலியால் இளைஞர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில், 'மகனின் காதலி தான் குளிர்பானத்தில் திராவகம் கலந்துகொடுத்து தன் மகனை கொலை செய்துவிட்டதாக' இளைஞரின் தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே பாறசாலை மூறியன்கரை பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜன். இவரது மகன் ஷாரோன் ராஜ் (வயது 23).
பி.எஸ்சி ரேடியாலஜி படித்து வரும் ஷாரோன் ராஜ் களியக்காவிளை அருகே ராமவர்மன்சிறை பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

காதலி வீட்டில் குளிர்பானம் குடித்தார்
இந்தநிலையில், கடந்த 14-ஆம் தேதி அன்று நண்பர் ஒருவருடன் ஷாரோன் ராஜ் காதலி வீட்டுக்கு சென்றிருக்கிறார். நண்பர் வீட்டின் வெளியில் நிற்க, ஷாரோன் ராஜ் மட்டும் காதலியின் வீட்டுக்குள் சென்றுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து அவர் வெளியே வந்தார். தொடர்ந்து நண்பருடன் அவர் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது நண்பரிடம் தனக்கு வயிறு வலிப்பதாக ஷாரோன் ராஜ் கூறியுள்ளார். ஏன் என்று நண்பர் கேட்டதற்கு, காதலி வீட்டில் கசாயம், குளிர்பானம் குடித்ததாக கூறினார்.

சிகிச்சை பலனின்றி பலி
ஆனால் வலி தொடர்ந்து அதிகரித்ததால் வீட்டுக்கு கூட அவரால் செல்ல முடியவில்லை. இதையடுத்து அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் வலி நிற்கவில்லை. இதையடுத்து ஷாரோன் ராஜ் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலினின்றி ஷாரோன் ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

மாணவரின் தந்தை புகார்
இதனால் ஜெயராஜன் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து போலீசில் புகார் அளித்த ஜெயராஜன் மகனின் காதலி தான் குளிர்பானத்தில் எதையோ கலந்து கொடுத்து கொலை செய்துவிட்டதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் திடீரென வயிற்று வலியால் மகன் பலியானது குறித்து ஜெயராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரேத பரிசோதனை அறிக்கை
மூடநம்பிக்கையால் என் மகனை திட்டம்போட்டு கொன்றுவிட்டனர். புகார் கொடுத்தும் போலீசார் விசாரணை முறையாக நடத்தவில்லை. என்று கூறினார். இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், 'ஷாரோன் ராஜின் பிரேத பரிசோதனை அறிக்கையில் சந்தேகப்படும்படியாக எதுவும் இல்லை. எனினும் ஜெயராஜன் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஷாரோன் ராஜின் உடல் மீண்டும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகளின்படி அடுத்தக்கட்ட விசாரணை மேற்கொள்ளப்படும்' என்றனர்.












Click it and Unblock the Notifications