திமுக தலைமை கொடுத்த புது பதவி! மாஸ் காட்டிய மாஜி அமைச்சர்! அதிருப்தியாளர்களை அணி திரட்டிய பின்னணி!
கன்னியாகுமரி: திமுகவில் எந்த பதவியும் இல்லாமல் இருந்த முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், அண்மையில் கிடைத்த கழக தணிக்கை குழு உறுப்பினர் பதவியின் மூலம் உற்சாகமாக வலம் வர ஆரம்பித்துள்ளார்.
தன்னை திமுக தணிக்கை குழு உறுப்பினரக நியமனம் செய்யப்பட்ட பிறகு நாகர்கோவிலில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற சுரேஷ்ராஜன், ஒரு பெரும் கூட்டத்தையே திரட்டி மாஸ் காட்டியிருக்கிறார்.
அமைச்சர் மனோ தங்கராஜூக்கும், நாகர்கோவில் மேயர் மகேஷுக்கும் இதன் மூலம் பவர்ஃபுல் மெசேஜ் கூறியிருக்கிறார் சுரேஷ்ராஜன்.
கன்னியாகுமரி மாவட்டம்
கன்னியாகுமரி மாவட்ட திமுகவின் முக்கிய முகமாக திகழ்ந்த முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் கடந்த சில மாதங்களாக கட்சியில் எந்தப் பதவியும் இல்லாமல் இருந்து வந்தார். மாவட்டச் செயலாளர்கள் தேர்தலில் கூட தலைமை பச்சைக் கொடி காட்டாததால் விருப்ப மனு கூட அவர் அளிக்கவில்லை. இந்நிலையில் அண்மையில் திமுக தணிக்கை குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டதை அடுத்து சுரேஷ் ராஜன் மீண்டும் பழைய உற்சாகத்தோடு கட்சிப் பணிகளில் சுறுசுறுப்பு காட்டத் தொடங்கியிருக்கிறார்.
தணிக்கை குழு உறுப்பினர்
தணிக்கை குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டதை தொடர்ந்து சென்னைக்கு சென்ற சுரேஷ்ராஜன், துரைமுருகன், உதயநிதி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களை நேரில் சந்தித்து நன்றி கூறினார். அதைத் தொடர்ந்து புதிய பதவியுடன் நாகர்கோவில் வந்திறங்கிய அவருக்கு அவரது ஆதரவாளர்கள் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்து கவனம் ஈர்த்தனர். அதுமட்டுமல்லாமல் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்ற போது ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடி சுரேஷ்ராஜனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நெகிழ்ந்து போன சுரேஷ்ராஜன்
இதனால் மனிதர் அப்படியே நெகிழ்ந்து போய்விட்டார். கடந்த சில மாதங்களாக அயர்ந்து சோர்ந்து காணப்பட்ட சுரேஷ்ராஜன், இப்போது மீண்டும் பழைய பரபரப்பு அரசியலுக்கு திரும்பியுள்ளார். இதனிடையே சுரேஷ்ராஜனுக்கு எப்படி இவ்வளவு கூட்டம் கூடியது என அமைச்சர் மனோதங்கராஜ் மற்றும் நாகர்கோவில் மேயர் மகேஷ் தரப்பு விசாரித்திருக்கிறது. அப்போது, திமுக உட்கட்சி தேர்தலில் பதவி கிடைக்காதவர்கள் அனைவரும் ஒன்று கூடி சுரேஷ்ராஜன் பின்னால் அணிவகுத்திருப்பது தெரிய வந்திருக்கிறது.
இது ஆரம்பம் தான்
இதனிடையே இது ஆரம்பம் தான், போக போக இன்னும் பல மாற்றங்கள் நடக்கும் என சுரேஷ்ராஜன் ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள். சுரேஷ்ராஜனை பொறுத்தவரை ஒரு காலத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது இவர் மீது கூறப்பட்ட சில புகார்கள் தான் அவரை இந்த நிலைக்கு கொண்டு வந்தது என்பதும் கவனிக்கத்தக்கது.