கொட்டாங்கச்சியில் என்னவெல்லாம் செய்யலாம் தெரியுமா?.. தூக்கி எறியாதீர் மக்களே!
கன்னியாகுமரி: மனிதர்கள் பயன்படுத்தி விட்டு தூக்கி எரியும் கொட்டாங்கச்சியை (தேங்காய் சிரட்டை ) பயன்படுத்தி பல்வேறு அழகு சாதன பொருட்களை செய்து வேலை வாய்ப்பை கொடுப்பதோடு அதனை பிறருக்கும் சொல்லி கொடுத்து ஊக்குவிக்கிறார் கன்னியாகுமரியை சேர்ந்த ஜெயகுரூஸ், சிறிய முதலீட்டில் பலருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் அழகு கலை பொருட்கள் தயாரிப்பு குறித்த செய்தி தொகுப்புதான் இது.
மனிதனின் அன்றாட உணவில் சுவையை அதிகரிக்க தேங்காய் இன்றியமையாத பொருளாக அமைகிறது, ஆனால் தேங்காயை எடுத்த பின்னர் மிஞ்சும் கொட்டாங்கச்சியை பலரும் தூக்கி எரிவதே வழக்கமாக உள்ளது.
இப்படி தூக்கி எரியும் கொட்டாங்கச்சியை மிக குறைந்த விலைக்கு வாங்கி அதன் மூலம் செய்யப்படும் அகப்பை திருமண வீடுகளில் சமையல் போன்ற பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுவதை நாம் பார்த்து இருக்கிறோம், ஆனால் 5௦ பைசாக்கு வாங்கப்படும் கொட்டாங்கச்சியை அழகுப்படுத்தி அதனை பல்வேறு பொருட்களாக தயாரித்து அதனை ஐம்பது ரூபாய், நூறு ரூபாய் என பொருளின் அழகுக்கு ஏற்றார் போல் விற்பனை செய்து வருகிறார் முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியை சேர்ந்த ஜெயகுரூஸ்.
அழகு சாதன பொருட்கள்
36 வருடங்களுக்கு முன் எந்த வேலையும் இல்லாமல் சுய தொழில் தொடங்க பணம் இல்லாமல் பல்வேறு வீடுகளில் கொட்டாங்கச்சிகளை விலைக்கு வாங்கி அதனை கரியாக்கி ஒரு வேலை உணவுக்கு பணம் பார்த்து வந்த ஜெயகுரூசிர்க்கு திடீரென இந்த கொட்டாங்கச்சிகளை ஏன் அழகு சாதன பொருட்களாக தயாரிக்க கூடாது என்ற எண்ணம் தோன்றியது.
அதனை நிறைவேற்றும் விதமாக தான் சேகரிக்கும் கொட்டாங்கச்சிகளில் பெரியவற்றை தனியாக எடுத்து அதனை சீவி டீ கோப்பை தயாரித்து அதனை கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் விற்பனை செய்தார்,
நாளடைவில் இவரின் தயாரிப்புகளுக்கு மவுசு அதிகரித்ததன் தொடர்ந்து தனது முழு நேர பணியாக கொட்டாங்கச்சியில் பல்வேறு கலைபொருட்களை தயாரிக்கும் பணியை தொடங்கினார் ஜெயகுரூஸ்.
வட்ட வடிவில்
குமரி மாவட்டத்தின் கடற்கரை பகுதிகளில் உள்ள தென்னை மரங்களில் இருந்து கிடைக்கும் தேங்காய்கள் அதிக பருமனுடன் அடர்த்தியாக இருப்பதால் அவற்றை மொத்தமாக கொள்முதல் செய்து அதனை மேற்பகுதியில் சிறியதாக வட்ட வடிவில் நவீன பிளேடு மூலம் வெட்டி எடுக்கின்றனர்.
நன்கு சுத்தம்
வெட்டி எடுக்கப்பட்ட தேங்காய்களை வீடுகளுக்கு மிக குறைந்த அல்லது கொள்முதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதனால் தேங்காய் கொள்முதல் செய்யும் பணம் மீண்டும் தன்னிடம் வருகிறது. அதே போன்று விலை குறைவாக இருப்பதால் பொதுமக்களும் தேங்காய்களை விரும்பி வாங்கி செல்வர். இவ்வாறு கிடைக்கும் தேங்காய் ஓட்டின் மேற்பகுதியில் உள்ள பிசுறுகளை முழுவதுமாக நன்கு சுத்தம் செய்கின்றனர்.
சிறு துண்டு
பின்னர் செய்யப்படும் பொருட்களுக்கு ஏற்றவாறு தேங்காய் ஓட்டின் மீது டிசைன் வரைந்து வெட்டி எடுக்கப்படுகிறது. வெட்டி எடுக்கப்பட்ட துண்டுகளை பாலிஷ் செய்கின்றனர். அவ்வாறு செய்யும் போது மேல்பகுதி முழுவதும் வழுவழுப்பான தன்மையை பெறுகிறது. மேலும் இந்த தேங்காய் ஓடுகளில் மரத்தினால் ஆன சிறு ,சிறு துண்டுகளையும் சேர்த்து தேவைக்கேற்றவாறு பொருட்களை வடிவமைத்து கொள்கின்றனர்.
விற்பனை
இது குறித்து அதன் உற்பத்தியாளர் ஜெயகுரூஸ் கூறுகையில், கொட்டாங்கச்சியில் இருந்து வீட்டிற்கு தேவையான டீ கப், அகப்பை, சமையல் கரண்டிகள் மட்டுமின்றி நகைபெட்டி, நெக்லஸ், பேனா, கை கடிகாரம் ,முதியவர்கள் பயன்படுத்தும் கைத்தடி என 200 க்கும் மேற்பட்ட பொருட்கள் செய்யப்படுகின்றன.
நல்ல வரவேற்பு
கொட்டங்கச்சியை பயன்படுத்தி தயாரிக்கபடும் பொருட்கள் 80 ஆண்டுகளுக்கு மேல் சேதமடையாது. இந்த பணியில் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிகின்றனர். அவர்கள் இதன் மூலம் மாதந்தோறும் 5000 முதல் 6000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். பாரம்பரியம் மற்றும் நவீன தொழில்நுட்பம் கலந்து செய்யப்படும் இந்த அழகு கலை பொருட்கள் இந்தியா மட்டுமின்றி ஜெர்மன், பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது என தெரிவித்தார்.
பாராட்டு
மேலும் மாதந்தோறும் இங்கிருந்து ஏராளமான கலைபொருட்கள் வெளிநாடுகளுக்கு விற்பனைக்காக அனுப்பபடுகிறது. மனித பயன்பாட்டில் அன்றாடம் கொட்டாங்கச்சி பலரும் தூக்கி வீசப்படும் கழிவு பொருள். ஆனால் அதனை நவீன தொழில்நுட்பத்தின் காரணமாக அழகு கலை பொருட்களாக செய்து விற்பனை செய்வதன் மூலமாக உரிய லாபம் பார்ப்பதோடு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுக்கும் இவரின் செயல் பாராட்டுதலுக்குரியது.