கொட்டி தீர்த்த மழை.. தனித்தீவுபோல் மாறிய குமரி.. வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் தோட்ட தொழிலாளர்கள்!
சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. தொடர்ந்து கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்பட 16 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக பேய் மழை வெளுத்து வாங்கியது.
நாகர்கோவில் மற்றும் அதன் பல்வேறு சுற்றுப்புற பகுதிகளிலும் மழை வெள்ள சேதம் ஏற்பட்டது. மழை காரணமாக நாகர்கோவில்-திருவனந்தபுரம் சாலை முற்றிலுமாக முடங்கியுள்ளது. இந்த பகுதிகளில் சாலை போக்குவரத்து, ரயில் போக்குவரத்து முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது,

போக்குவரத்து தடை
இதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் மலை பகுதிகளான கரும்பாறை, மாறாமலை உட்பட பல்வேறு பகுதிகளிலும் மழை காரணமாக வனப்பகுதியில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து முழுவதுமாக தடைப்பட்டுள்ளது.

மண்சரிவு
கரும்பாறை எஸ்டேட் பகுதியில் 70-க்கும் மேற்பட்ட தனியார் தோட்டங்கள் உள்ளன. இங்கு இரண்டாயிரத்திற்கு மேற்பட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள். தற்போது பெய்துள்ள மழை காரணமாக கடந்த நான்கு நாட்களுக்கு முன் சாலைகளில் விரிசல், மண்சரிவு அதே போன்று பெரிய பாறைகள் சாலைகளில் விழுந்து காணப்படுவதால் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது.

காட்டாற்று வெள்ளம்
வனப்பகுதியில் 10-க்கும் மேற்பட்ட பகுதிகளில் முழுவதுமாக சாலை காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் உள்ளது. இதனால் தற்போது தொழிலாளர்கள் அந்த பகுதிக்கு செல்ல முடியாத சூழ்நிலையும் தோட்டங்களில் உள்ள தொழிலாளர்களும் தோட்ட உரிமையாளர்களும் அங்கிருந்து வெளியே வரமுடியாத சூழலுக்கும் உள்ளாகியுள்ளனர்.

மாவட்ட வனத்துறை கூறுவது என்ன?
அப்பகுதிகளை மாவட்ட வனத்துறை அலுவலர் மற்றும் வனத்துறை ஊழியர்கள் சென்று பார்வையிட்டனர். மேலும் அப்பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட வனத்துறை அலுவலர் இளையராஜா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications