கனமழையால் வெள்ளக்காடான குமரி மாவட்டம் : விரைந்த பேரிடர் மீட்புக்குழு - மிகப்பெரிய பேரழிவு
மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையால் கன்னியாகுமரி மாவட்டமே வெள்ளக்காடாக மாறியுள்ளது. காணும் இடமெங்கும் தண்ணீராக காட்சியளிப்பதால் மக்கள் கண்ணீரில் தத்தளிக்கின்றனர்
கன்னியாகுமரி: கன மழை பெய்து குமரி மாவட்டமே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். வெள்ளத்தில் சிக்கிக்தவிக்க்கும் மக்களை மீட்க பேரிடர் மீட்புக்குழுவினர் கன்னியாகுமரிக்கு விரைந்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. குமரி மாவட்டத்தில் கடந்த 3 வாரத்திற்கும் மேலாக மழை கொட்டி தீர்த்து வருகின்றது. நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய கனமழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அணைகளில் இருந்து அதிக அளவில் நீர் வெளியேற்றப்பட்டதால் கோதையாறு, வள்ளியாறு, பழையாறு, குழித்துறை தாமிரபரணி ஆறு, பரளியாறு போன்றவற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குழித்துறை தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை மூழ்கிய நிலையில் வெள்ளம் பாய்கிறது.

ஆற்றில் வெள்ளம்
தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மணக்காலையில் இருந்து படந்தாலுமூடு செல்லும் அதங்கோடு சாலையில் வெள்ளம் புகுந்து குளம் போல காட்சியளித்தது. இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சிறுவர் நீச்சல்குளத்தையும், அதையொட்டி உள்ள கல் மண்டபத்தையும் மூழ்கடித்து பாய்கிறது.

மூழ்கிய வீடுகள்
ஈசாந்திமங்கலம் அருகே உள்ள நங்காண்டி கிராமத்தை வெள்ளம் சூழ்ந்ததால் இங்குள்ள 18 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர். அவர்களை தீயணைப்பு படையினர் மீட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைத்தனர். தெள்ளாந்தி பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் ஈசாந்திமங்கலம், செண்பகராமன்புதூர், கட்டளைகுளம், சமத்துவபுரம் போன்ற பகுதிகளில் குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

வெள்ளம் சூழ்ந்த கன்னியாகுமரி
ஆரல்வாய்மொழி பெருமாள்புரத்தில் மழை வெள்ளம் சூழ்ந்ததால் 180 பேர் அருகில் உள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். நேற்று மதியம் வெள்ளம் வடிந்ததும் அவர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர். செண்பகராமன்புதூர் அருகே உள்ள கட்டளை குளத்தில் உடைப்பு ஏற்பட்டது. அதில் இருந்து வெளியேறிய தண்ணீர் அருகில் உள்ள ஓடையில் பாய்ந்தது. அதைத்தொடர்ந்து கட்டளை குளத்தில் மண் மூடைகள் போட்டு தண்ணீர் வெளியேறுவதை தடுக்கும் பணி நடந்தது.

வீடுகளை சூழ்ந்த வெள்ளநீர்
இதே போல் பூதப்பாண்டி அருகே உள்ள நாவல்காடு நாடான் குளத்தில் உடைப்பு ஏற்பட்டது. அந்த குளத்து தண்ணீர் நாவல்காடு, இறச்சகுளம் ஆகிய ஊர்களுக்குள் புகுந்தது. இதேபோல தோவாளை தாலுகாவில் நேற்று மேலும் 2 குளங்களில் உடைப்பு ஏற்பட்டது. அங்கு 4 குளங்களில் உடைப்பு ஏற்பட்டு அந்த தண்ணீர் ஊருக்குள் புகுந்தது.
தேரேகால புதூர் நாஞ்சில் நகர் பகுதியிலும், திருப்பதி சாரம் பகுதியிலும் படகுகள் மூலம் வீடுகளில் புகுந்த வெள்ளத்தில் சிக்கித்தவித்த பொதுமக்கள் மீட்கப்பட்னர்.

போக்குவரத்து துண்டிப்பு
நாகர் கோவில் ஒழுகினசேரி அப்டா மார்க்கெட் பகுதியில் சாலையை தாண்டி பழையாற்று தண்ணீர் செல்வதால் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இது நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு செல்லும் பிரதான சாலை என்பதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதன்காரணமாக அந்த வழியாக செல்ல வேண்டிய வாகனங்கள் அனைத்தும் அஞ்சுகிராமம் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.

மக்களை மீட்க விரைவு
கன மழை பெய்து குமரி மாவட்டமே வெள்ளக்காடாக காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். வீடுகளுக்கும் சாலைகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வெள்ளத்தில் சிக்கித்தவிப்பவர்களை மீட்க பேரிடர் மீட்புக்குழுவினர் கன்னியாகுமரிக்கு விரைந்துள்ளனர்.

போக்குவரத்து துண்டிப்பு
வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் சாலைகள் பெயர்ந்துள்ளன. தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இந்நிலையில் சென்னை எழும்பூரில் இருந்து நாளை காலை 9 மணிக்கு புறப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாகர்கோவில் - திருவனந்தபுரம் இடையே ஏற்பட்டுள்ள நிலச்சரிவு காரணமாக ரயில் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல நாகர்கோவிலில் இருந்து இன்று பிற்பகல் 1 மணிக்கு புறப்படும் கோட்டயம் எக்ஸ்பிரஸ் ரயிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications