75 வயதில் முதல்முறையாக MLA.. 1980-லிருந்து கஜினி முகமது போல் படையெடுப்பு.. சாதித்த பாஜகவின் காந்தி.!
கன்னியாகுமரி: 75 வயதில் முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினராகி தமிழகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் பாஜகவின் எம்.ஆர்.காந்தி.
Recommended Video
நாகர்கோவில் தொகுதியில் திமுக வேட்பாளர் சுரேஷ்ராஜனை எதிர்த்து போட்டியிட்ட அவர், 11,669 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றிவாகை சூடியுள்ளார்.
இதனிடையே கடந்த 1980-ம் ஆண்டு முதல் இவர் தொடர் தோல்வியை சந்தித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
பாஜகவுக்கு ஆச்சரியம்.. நாகர்கோவிலில் எம்.ஆர். காந்தி வெற்றி!
நாகர்கோவில்
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பல்வேறு ஆச்சரியங்களையும், வியப்பையும் அளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. வெற்றிபெறுவார் எனக் கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்டவர்கள் தோல்வியை தழுவியிருப்பது, தோல்வியடைவார் எனக் கூறப்பட்டவர்கள் வெற்றி பெற்றிருப்பதும் நடந்துள்ளது. அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதற்கு உதாரணமாக நேற்றைய தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.
75-வது வயதில்
அந்த வகையில் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தி, தனது 75-வது வயதில் முதல்முறையாக சட்டமன்றத்திற்குள் செல்லவிருக்கிறார். இதுவரை 6 முறை தொடர்ந்து தோல்வியை மட்டுமே சந்தித்து வந்த எம்.ஆர்.காந்தி, 7-வது முறையாக போட்டியிட்டு இப்போது வெற்றிவாகை சூடியிருக்கிறார்.
6 முறை தோல்வி
கடந்த 1980-ம் ஆண்டு முதல் காந்தி தேர்தலில் போட்டியிட்டு வந்தது கவனிக்கத்தக்கது. 1980, 1984, 1989, 2006, 2011, 2016, என 6 முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளார் இவர். இதில் மூன்று முறை நாகர்கோவில் தொகுதியிலும், இரண்டு முறை குளச்சல் தொகுதியிலும், ஒரு முறை கன்னியாகுமரி தொகுதியிலும் போட்டியிட்டார். ஆனால் அவருக்கு கிடைத்ததோ தொடர் தோல்விகள் மட்டும் தான். இந்நிலையில் தான் இப்போது 7-வது முறை போட்டியிட்டு நாகர்கோவில் எம்.எல்.ஏ,வாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாஜக சார்பில்
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து இதுவரை 2 பேர் மட்டுமே பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கின்றனர். ஒருவர் சி. வேலாயுதம், இவர் 1996 தேர்தலில் வெற்றிபெற்றார். மற்றொருவர் எம்.ஆர்.காந்தி, தற்போது வெற்றி பெற்றிருக்கிறார். திமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சுரேஷ்ராஜனின் அதீத நம்பிக்கையே நாகர்கோவிலில் அவரது தோல்விக்கு காரணமாக கூறப்படுகிறது.