16 வகை தீர்த்தம் கொண்ட.. முக்கடலும் சங்கமிக்கும் குமரியில்... தை அமாவாசை பலி கர்ம பூஜை
Recommended Video

கன்னியாகுமரி: தை அமாவாசையை முன்னிட்டு இன்று 16 வகை தீர்த்தங்களை கொண்ட முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களின் நினைவாக பலி கர்ம பூஜைகள் செய்து கடலில் புனித நீராடினார்கள்.
உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் வந்திருந்து தர்ப்பணம் செய்தனர்.

ஆடி அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாட்களில் புண்ணிய நீர் நிலைகளுக்கு சென்று தங்கள் முன்னோர்களை நினைத்து பலி கர்ம பூஜைகள் செய்து புனித நீராடுவது இந்துகளின் கடமையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் லட்சுமி தீர்த்தம், காயத்திரி தீர்த்தம், விநாயகர் தீர்த்தம் உள்ளிட்ட 16 தீர்த்தங்களை கொண்ட முக்கடல் சங்கமம் கன்னியாகுமரியில் தங்கள் முன்னோர்கள் நினைவாக பலி கர்ம பூஜைகள் செய்து புனித நீராடுவதற்காக மக்கள் கன்னியாகுமரியில் குவிந்தனர்.

குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி, மதுரை, உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளாவில் இருந்தும் ஏராளமானோர் இன்று அதிகாலையிலே கன்னியாகுமரிக்கு வருகை தந்தனர். இங்குள்ள வேத விற்பனர்களிடம் எள், பச்சரிசி, தர்பை, பூ உள்ளிட்ட பொருட்களால் பூஜைகள் செய்து தங்கள் முன்னோர்களை நினைத்து முக்கடல் சங்கமத்தில் புனித நீராடினார்கள்.
இது போன்று இந்த நாட்களில் செய்வதால் தங்கள் முன்னோர்களால் சகல ஐஸ்வாரியமும் கிடைப்பதாக தர்ப்பணம் செய்தவர்கள் தெரிவித்தனர். முக்கடல் சங்கமத்தில் புனித நீராடிவர்கள் பின்னர் இங்குள்ள அருள்மிகு பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் பெற்று சென்றனர். இந்த நிகழ்ச்சியையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.












Click it and Unblock the Notifications