101 சவரன் போட்டும் பத்தலையா.. இன்னும் வாங்கியாரேன்.. என்னுடன் வாழுங்க.. அழுது புரண்ட பெண் வக்கீல்
கன்னியாகுமரி: திருமணத்தின் போது 101 சவரன் நகை, ரூ 2 கோடி மதிப்பிலான சொத்து கொடுத்தும் அதிக வரதட்சணை கேட்டு கணவர் வீட்டை விட்டு வெளியே தள்ளி கேட்டை பூட்டியதால் கொட்டும் மழையில் பெண் வழக்கறிஞர் அழுது துடித்த காட்சிகள் சோகத்தை ஏற்படுத்தியது.
Recommended Video
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையை அடுத்த திருத்துவபுரத்தை சேர்ந்தவர் மொழிப்போர் தியாகி ஜேம்ஸ். இவரது மகள் பிரியதர்ஷினி (28). வழக்கறிஞராக உள்ளார்.
இவருக்கும் முளகுமூடு பகுதியைச் சேர்ந்த நாகர்கோவில் கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து வரும் ராஜ ஷெரின் இருவருக்கும் 9.1.20 அன்று திருமணம் நடைபெற்றது.

5 லட்சம் ரூபாய்
திருமணத்தின் போது 101 பவுன் நகை மற்றும் 5 லட்சம் ரூபாய் ரொக்கம், ரூ 2 கோடி மதிப்பிலான சொத்தும் வரதட்சணையாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் திருமணம் ஆன நாள் முதல் பிரியதர்ஷினியின் மாமனார் எலியாஸ், மாமியார் பேபி சரோஜா, மற்றும் கணவரின் சகோதரி நிர்மல் சுபி, அவரது கணவர் ஸ்டாலின் பிரபு ஆகியோர் அதிக நகைகள் கேட்டு தொடர்ந்து கொடுமை செய்து வந்துள்ளதாக தெரிகிறது.

உடல் ரீதியில்
அவரை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து பிரியதர்ஷினி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் கோர்ட் ஆலோசனை படி போலீசார் இருவரையும் தனியாக வீடு எடுத்து வாழ அறிவுரை கூறினார்.

தனி வீடு
அதன்படி நாகர்கோவில் கோணம் அருகே தனியாக வீடு எடுத்து பிரியதர்ஷினியும் அவரது கணவரும் குடியேறினர். இந்நிலையில் சென்னையில் நல்ல சம்பளத்தில் வேலை தயாராக உள்ளது என்றும் அந்த வேலையில் சேர்ந்தவுடன் அங்கு அழைத்துச் செல்வதாக பிரியதர்ஷினியிடம் சொல்லிவிட்டு நள்ளிரவில் ராஜ ஷெரின் சென்றுள்ளார்.

தகவல் இல்லை
ஆனால் சில நாட்களாகியும் அவரிடம் இருந்து எந்தவித தகவலும் வராததால் அவரை போனில் தொடர்பு கொண்டார். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து நண்பர்களுக்கும் போன் செய்து விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் பிரியதர்ஷினி தனது கணவர் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார்.

வெளியே தள்ளிய குடும்பம்
அப்போது ராஜ ஷெரின் அங்கு இருப்பதை பார்த்து "என்னை ஏன் இவ்வாறு ஏமாற்றுகிறீர்கள்" என கேள்வி எழுப்பி உள்ளார். உடனே அவரது கணவர் ராஜ ஷெரின் மற்றும் தந்தை, தாயார் ஆகியோர் சேர்ந்து வக்கீல் பிரியதர்ஷினியை வெளியே தள்ளி கேட்டை பூட்டி விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வக்கீல் பிரியதர்ஷினி "என்னை வீட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள். நான் எவ்வளவு வரதட்சணை வேண்டுமானாலும் வாங்கித் தருகிறேன். கேட்டை திறந்து விடுங்கள்" என கதறி அழுதார்.

அழுது புரண்ட பிரியதர்ஷினி
ஆனால் அவர்கள் திறந்து விடுவதாக இல்லை. இதனால் வழக்கறிஞர் பிரியதர்ஷினி சாலையில் அமர்ந்து அழுது புரண்டார். இந்நிலையில் தக்கலை போலீசார் விரைந்து வந்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பிரியதர்ஷினி கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக தெரிவித்தார். நீதிபதி தேர்வுக்கு தயாராகி வரும் தான் நீதிபதியாக கூடாது என கணவர் குடும்பத்தினர் மிரட்டி வருவதாகவும் அவர் தெரிவித்தார். கணவருடன் தன்னை சேர்த்து வைக்க கோரி பிரியதர்ஷினி அழுதது காண்போர் மனதை இளகச் செய்தது.












Click it and Unblock the Notifications