'இந்த' இரண்டு கட்சிகளும்... அரசு பணத்தை கொள்ளையடிப்பதில் ருசி கண்டவர்கள்.. சீறும் டிடிவி தினகரன்
கரூர்: தமிழ்நாட்டில் உள்ள இரண்டு பிரதான கட்சிகளும் அரசு பணத்தைக் கொள்ளையடிப்பதில் ருசி கண்டவர்கள் என்று டிடிவி தினகரன் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார் .
தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு வாரங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு நாள் நெருங்க நெருங்க தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் மற்ற கட்சிகளை நோக்கி கூர்மையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.
இந்த முறை தமிழ்நாடு அரசியலில் ஐந்து முனை போட்டி நிலவுகிறது. திமுக, அதிமுக அணிகளைத் தவிர மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் தேர்தலில் களமிறங்கியுள்ளன.
கொள்ளையடிப்பதில் ருசி கண்டவர்கள்
தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து கட்சி தலைவர்கள் தீவிரமாகப் பிரசாரம் செய்து வருகின்றனர். அதன்படி கரூர் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் உள்ள இரண்டு பிரதான கட்சிகளும் அரசு பணத்தைக் கொள்ளையடிப்பதில் ருசி கண்டவர்கள் என்று கடுமையாக விமர்சித்தார்.
கஜானா காலி
மேலும், அதிமுக அரசின் கஜானாவை முற்றிலுமாக காலி செய்துவிட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார் எப்படியாவது அரசு கஜானாவில் மீண்டும் கை வைக்க வேண்டும் என்பதே இரண்டு கட்சி வேட்பாளர்களின் ஒரே நோக்கமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பஸ் மாறுவதைப் போல கட்சி மாறுகிறார்
கரூர் திமுக வேட்பாளர் ஏற்கனவே அதிமுகவில் இருந்து சட்டசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்றும் பிறகு எங்களுடன் இருந்த நபர், இப்போது அவர் மீண்டும் கட்சி மாறிவிட்டார் என்று செந்தில் பாலாஜியை மறைமுகமாக விமர்சித்தார். அவர் ஏதோ ஒரு முறை அதிர்ஷ்டவசமாக வெற்றி பெற்றுவிட்டார் என்றும் மீண்டும் அப்படி நடக்காது என்றும் அவர் பேசினார். பஸ் மாறுவதைப் போல அவர் கட்சிகளை மாறி வருகிறார் என்று கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
பொய்யான வாக்குறுதிகள்
தொடர்ந்து திமுக அதிமுகவின் வாக்குறுதிகள் குறித்துப் பேசிய அவர், "குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதாக திமுக அறிவித்துள்ளது. அதேபோல 1,500 ரூபாய் வழங்குவதாக அதிமுக அரசு அறிவித்துள்ளது. ஆனால், அப்படியெல்லாம் கொடுக்க முடியாது. அதற்கான நிதி அரசிடம் இல்லை. தமிழக அரசுக்கு சுமார் ஆறு லட்சம் கோடி கடன் உள்ளது. மாநிலத்திலுள்ள ஒவ்வொரு நபர் மீதும் கடன் இருக்கிறது. மாநிலத்தில் நிதியே இல்லாதபோது, எப்படி வாஷிங் மெசின், மாதம் ஆயிரம் ரூபாய் போன்றவை வழங்க முடியும். அனைத்தும் பொய்யான வாக்குறுதிகள்" என்றும் அவர் தாக்கி பேசினார்.