"இன்னும் 27 அமாவாசைகளில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடக்கும்.." அடித்து கூறும் ஈபிஎஸ்.. பரபர பேச்சு
கரூர்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்று சில நாட்களே உள்ள நிலையில், அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி இன்று கரூரில் பிரசாரம் செய்தார்.
சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி, ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சூழலில் கரூர் மாவட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார்.
அனல் பறக்கும் அரசியல்.. ஸ்டாலின் VS எடப்பாடி! நீட் தேர்வு பற்றி நேரில் விவாதம்.. சவாலை ஏற்ற இபிஎஸ்!
திமுக தேய்பிறை கட்சி
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, "வரும் நகரப்புற உள்ளாட்சித் தேர்தலைத் தடுத்து நிறுத்த திமுக அரசு எவ்வளவோ, முட்டுக்கட்டை போட்டது. உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னர் தான் இப்போது இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. கரூரில் உள்ள தற்போதைய திமுக அமைச்சர் எந்த கட்சியிலிருந்து வந்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும், பல கட்சிகளுக்கு மாறியவர். வரும் தேர்தலுக்கு எந்த கட்சியில் வேட்பாளராக இருப்பார் என்பது தெரியவில்லை. ஆனால் அதிமுகவில் இருப்பவர்கள் ஐ.எஸ்.ஐ முத்திரை போன்றது. திமுக கட்சி தேய்பிறை போல் தேய்ந்து கொண்டே இருக்கிறது. அதிமுகவில் இருந்து திமுகவிற்குச் சென்ற 8 பேர் தற்போது அமைச்சர்களாக உள்ளனர். அதிமுகவில் அடையாளம் காணப்பட்டவர்கள் தற்போது திமுகவில் உள்ளனர், அவர்கள் அனைவரும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவினால் அடையாளம் காணப்பட்டவர்கள் தான் அனைவரும்.
யாருக்கும் தகுதி இல்லையா?
அப்படியென்றால் திமுகவில் யாருக்கும் தகுதி இல்லையா? ஆள் பிடிக்கும் வேலையில் திமுக ஈடுபட்டுள்ளது. டாக்டர் எம்.ஜி.ஆர் திமுக ஒரு தீய சக்தி என்று குறிப்பிட்டார். அதேபோல் தான் இப்போதும் அவர்கள் இன்றும் இருக்கிறார்கள். அதிமுக ஆளுங்கட்சியாக இருக்கும் போது, தமிழக அளவில், ஏன் என் தொகுதியிலேயே சில வேட்பாளர்கள் திமுக வில் ஜெயித்தார்கள். நாங்களும் ஜனநாயக முறைப்படி தான் தேர்தலை நடத்தினோம். அது தான் அதிமுக இயக்கம், ஜனநாயக முறைப்படி, நடந்து கொள்வோம். ஆனால், இங்குள்ள அமைச்சர் என்ன செய்கின்றார். யாரெல்லாம் தேர்தலில் நிற்கின்றார்களோ, அவர்களை மிரட்டுவது, போலீஸ் கொண்டு பொய் கேஷ் போடுவது என்று செய்து வருகின்றார். திராணி இருந்தால் அரசியல் ரீதியாக மோதலாம். அதை விட்டுவிட்டு வேட்பாளர்கள் மீது பொய் வழக்குப் போடுவது இதெல்லாம், ஏன்?
போலீசார்
நான் கூட 4 ½ வருடங்களாகத் தமிழக முதல்வராக இருந்தேன், அப்போது காவல்துறை ஸ்காட்லாந்து போலீஸ் போல் நேர்மையான முறையில் பணியாற்றினார்கள். ஆனால் தற்போது திமுகவின் கைப்பாவையாக உள்ளது. நாட்டிலேயே மிகவும் திறமை வாய்ந்த இந்த காவல்துறை தற்போது திமுக அமைச்சர்களுக்கும், திமுக கட்சிக்கும் ஏவல் துறையாக செயல்பட்டு வருகின்றது. ஆகையால், நிச்சயம் ஆட்சி மாற்றம் வரும்.
27 அமாவாசை
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்கின்ற விதத்தில் 2024 ம் வருடம் சட்டசபைக்கும் தேர்தல் வரும். ஆகையால் 27 அமாவாசை தான் இந்த ஆட்சி, ஆகவே ஆட்சியும் மாறும் காட்சியும் மாறும். ஆகையால், காவல்துறை நேர்மையாகச் செயல்பட வேண்டும். அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் என்று மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவது எதற்காக, மக்களுக்கு நல்லது செய்வதற்காக மட்டுமே, ஆனால் தற்போது உள்ள அமைச்சர்கள் எப்படிக் கொள்ளையடிப்பது, ஊழல் செய்வது என்று ஆலோசிப்பது தான் இவர்களது வேலையா? இதில் திறமை வாய்ந்தவர் கரூரில் உள்ளவர். செந்தில் பாலாஜி தலைமேல் கத்தி தொங்குகின்றது.
பொய் பேசுவதில் நம் ஒன்
தற்போதைய திமுக என்றாலே வாரிசு அரசியல் தான். முன்பு கருணாநிதி, அடுத்து மு.க.ஸ்டாலின், பின்பு உதயநிதி. இந்த 9 மாவட்ட காலத்தில் தமிழக அளவில் என்ன செய்தார்கள். குறிப்பாகக் கரூர் மாவட்டத்திற்கு என்ன செய்தார். ஈசிஆர் ரோட்டில் சைக்கிளில் செல்கின்றார். நடைப்பயணம் செல்கின்றார். அதற்காக எதற்கு அத்தனை போலீஸார். நீங்க நடைப்பயணம் மற்றும் சைக்கிள் செல்வதற்கு காவல்துறை எதற்கு? இந்தியாவிலேயே முதன்மை முதலமைச்சர் ஸ்டாலினாம், ஆட்சிக்கு வந்து 9 மாத காலமே ஆகின்றது. அதற்குள் நம்பர் ஒன் என கூறுகிறார். பொய் பேசுவதில் தான் நம் ஒன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டுமே. இதை நான் கூறினால், சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தோற்றுவிட்டார் விரக்தியில் பேசுகின்றேன் என்று கூறுகின்றார். திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை, எனக்குத் தெரிந்த வரை, ஏன் இந்தியாவிலேயே இத்தனை அறிவிப்புகள் வெளியிட்ட ஒரே கட்சி திமுக தான். அத்தனை அறிவிப்புகள் அறிவித்து எதையும் செய்யவில்லை.
உதயநிதி
கரூர் வந்த உதயநிதி ஸ்டாலினிடம் இல்லத்தரசிகளுக்கு ரூபாய் ஆயிரம் தருகின்றீர்கள் என்ன ஆனது எனப் பொதுமக்கள் கேட்டன. அதற்கு உதயநிதி ஸ்டாலின், இன்னும் 4 வருடங்கள் இருக்கின்றதே என்று மழுப்பியுள்ளார். 4 வருடங்கள் கழித்து நாமம் போட்டு விடுவார்கள். பெட்ரோலுக்கு மட்டும் ரூ 3 மட்டும் குறைத்துள்ளார்கள். டீசல் விலையைக் குறைக்கவில்லை, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையினை குறைத்துள்ளார்கள். தமிழகத்தில் குறைக்கவில்லை.
நகைக்கடன்கள் தள்ளுபடி
மேலும், நகைக்கடன்கள் தள்ளுபடி செய்வோம் என்று கூறினார்கள். 48 லட்சம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் கடன் பெற்றுள்ளார்கள். ஆனால் தகுதியானவர்களுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி என்று கூறியுள்ளார்கள். அதில் 13 லட்சம் பேர்கள் மட்டுமே தகுதி என்றும் மீதமுள்ள 35 லட்சம் பேர் தகுதியில்லை என்று கூறியுள்ளனர். மு.க.ஸ்டாலின் பேச்சினை கேட்டு, உதயநிதி ஸ்டாலின் பேச்சைக் கேட்டவர்கள் தற்போது அபராத வட்டியுடன் கடன் தொகையுடன் அசல் கட்டி வருகின்றனர். ஆகவே மக்கள் எப்போதும் அதிமுகவினை ஆதரிப்பார்கள்" என்றார்.v