எம்ஆர் விஜயபாஸ்கரும் தோற்கிறார்.. கரூர் மாவட்டத்தை ஸ்வீப் செய்கிறது திமுக.. விகடன் கணிப்பு
கரூர்: கரூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 4 தொகுதியையும் திமுகவே வெல்லும் என்று ஜூனியர் விகடன் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேகமாக வளர்ந்து வரும் தொழில் நகரான கரூரில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அ.தி.மு.க சார்பிலும், செந்தில் பாலாஜியும் போட்டியிடுவதால் திமுக -அதிமுக இடையே போட்டி நிலவுகிறது. பிரச்சாரம் அனல் பறக்கிறது.
கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை ஆகிய நான்கு 4 தொகுதிகள் உள்ளன.
கரூர் தொகுதிகள்
கரூர் மாவட்டத்தின் நான்கு தொதியிலும் திமுகவே வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. அதிமுகவை பொறுத்தவரை அரவக்குறிச்சியை தவிர மற்ற 3 தொகுதியிலும் களம் இறங்கி உள்ளது. அரவக்குறிச்சியில் பாஜக சார்பில் அண்ணாமலை போட்டியிடுகிறார். எந்த தொகுதியில் எந்த கட்சிக்கு அதிக ஆதரவு என்பதை இப்போது பார்ப்போம்
செந்தில் பாலாஜி
கரூர் தொகுதியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அ.தி.மு.க சார்பில் போட்டியிடுகிறார். திமுக சார்பில் செந்தில் பாலாஜி போட்டியிடுகிறார். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. கடந்தமுறை 441 வாக்குகள் வித்தியாசத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வென்று இருந்தார். ஆனால் இந்த முறை நிலைமை கடினமாக இருக்கும் என்கிறது விகடன் கணிப்பு. 2019 இடைத்தேர்தலில் அரவக்குறிச்சியில் போட்டியிட்டு வென்ற செந்தில் பாலாஜி இந்த முறை கரூரில் நேரடியாக போட்டிடுவதால் போட்டி கடுமையாக இருக்குமாம். எனினும் செந்தில் பாலாஜிதான் முன்னிலையில் உள்ளதாக கூறுகிறது ஜூனியர் விகடன் கணிப்பு.
இளங்கோ
அரவக்குறிச்சி தொகுதியை பொறுத்தவரை கடந்த முறை களம் இறங்கிய செந்தில் பாலாஜி கரூரில் மோதுவதால் அவருக்கு பதிலாக தி.மு.க-வில் புதுமுக வேட்பாளர் இளங்கோ களம் இறங்கி உள்ளார். அதிமுக கூட்டணி சார்பில் பா.ஜ.க-வில் மாநிலத் துணைத்தலைவர் அண்ணாமலையும் மோதுகிறார்.. இங்கு இஸ்லாமியர்களின் வாக்குகள் அதிகம் உள்ளதால் பா.ஜ.க-வுக்கு வாக்குகளை பெறுவது சவாலாக இருக்கும் என்றும், திமுகவின் இளங்கோவே வெல்ல வாய்ப்பு உள்ளதாக கூறுகிறதுஜூனியர் விகடன் கணிப்பு.
சிவகாமசுந்தரி
கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதியில் அ.தி.மு.க-வில் தானேஷ் என்கிற முத்துக்குமாரும் தி.மு.க-வில் வழக்கறிஞர் சிவகாமசுந்தரியும் போட்டியிடுகிறார்கள். இங்கு உட்கட்சி பூசல் அதிமுகவில் அதிகமாக உள்ளதாகவும் எனவே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் சிவகாமசுந்தரி வெல்லக்கூடும் என்கிறது ஜூனியர் விகடன் கணிப்பு.
மாணிக்கம்
குளித்தலை தொகுதியில் தி.மு.க-வில் முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கமும், அ.தி.மு.க-வில் என்.ஆர்.சந்திரசேகரும் போட்டியிடுகிறார்கள். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீனி.பிரகாஷும், அ.ம.மு.க வேட்பாளர் நிரோஷா ஆகியோர் ஒட்டுக்களை பிரிப்பதாலும், அ.தி.மு.க-வில் நிலவும் கடுமையான உட்கட்சிப்பூசல் காரணமாகவும் மாணிக்கமே வெல்வார் என்கிறது ஜூனியர் விகடன் கணிப்பு. அதாவது கரூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 4 தொகுதியையும் திமுகவே வெல்லும் என்கிறது ஜூனியர் விகடன் கணிப்பு.