கரூர் தவெக மத்திய மாநகர நிர்வாகி மாசி பவுன்ராஜ் கைது.. தனிப்படை போலீஸார் அதிரடி.. தீவிர விசாரணை
கரூர்: கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரையின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் மதியழகன், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்பட ஐந்து பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவரை தீவிரமாக தேடி வந்த தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, கரூர் மத்திய மாநகர நிர்வாகி மாசி பவுன்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். காலையில் வருவதாக அறிவித்த விஜய் இரவு 7 மணி அளவில் தான் வந்தார். இதனால் ஏராளமான பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் விஜய்யை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டனர். இதனால் நேரம் செல்ல கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. இந்த கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் குழந்தைகள், பெண்கள் என 41 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் திட்டமிட்ட சதி என்று தவெகவினர் குற்றம் சாட்டுகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்திற்கு குடியரசுத் தலைவர், பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் என பலரும் இரங்கல் தெரிவித்தனர். முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்,மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணையமைச்சர் எல் முருகன் உள்பட பலரும் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.
பாஜக அமைத்துள்ள 8 நபர்கள் கொண்ட ஹேமமாலினி தலைமையிலான குழு இன்று ஆய்வு மேற்கொள்ளவுள்ளது. இந்த சம்பவம் குறித்து கரூர் டவுன் போலீசார் தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், கட்சி நிர்வாகி சி.டி.நிர்மல்குமார் மற்றும் பலர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் தவெக கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த நிலையில், தனிப்படை போலீஸார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இதைத்தொடர்ந்து, தனிப்படை போலீசார் கரூரில் வைத்து நேற்று அவரை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து மற்றொரு தவெக நிர்வாகியான கரூர் மத்திய மாநகர நிர்வாகி மாசி பவுன்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications