கேள்விக்கு பதிலில்லை! சிரித்தவாறே வழியனுப்பிய அமைச்சர் செந்தில்பாலாஜி! வேட்பாளர் தேர்வு ருசிகரம்!
கரூர்: கரூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்பமனு கொடுத்தவர்களிடம் அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று முழுவதும் இடைவெளியின்றி நேர்காணல் நடத்தி முடித்திருக்கிறார்.
இந்த நேர்காணலில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் பலரும் திணறியதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வளவு செலவு செய்வீர்கள் என்ற வழக்கமான கேள்வியோடு மேலும் சில புள்ளிவிவரங்கள் அடங்கிய கேள்விகளையும் வேட்பாளர்களாக ஆசைப்படுபவர்களிடம் அமைச்சர் கேட்டிருக்கிறார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: வார்டு பங்கீடு..திமுகவுடன் காங்கிரஸ் பேச்சு.. அதிக இடங்கள் கிடைக்குமா
கரூர் மாவட்டம்
கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் ஒரு வழியாக நேர்காணல் நடத்தி முடித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, நேற்று தனது சொந்த மாவட்டமான கரூரில் வேட்பாளர் நேர்காணல் நடத்தினார். ஒவ்வொரு வார்டுக்கும் 10 பேர் வரை போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்பமனு கொடுத்திருந்ததால் அவர்கள் அனைவரையும் மொத்தமாக அழைத்து வார்டு விவரங்கள் குறித்து கேள்விகள் கேட்டிருக்கிறார்.
புள்ளி விவரம்
வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கிறது, எவ்வளவு செலவு செய்வீர்கள், மக்கள் மத்தியில் அறிமுகம் உள்ளிட்ட வழக்கமான கேள்விகளை முதலில் கேட்டுவிட்டு பிறகு, உங்கள் வார்டில் வாக்காளர்கள் எண்ணிக்கை எவ்வளவு, ஆண் வாக்காளர்கள், பெண் வாக்காளர்கள், எவ்வளவு கடந்த தேர்தலில் எந்தெந்த கட்சி எவ்வளவு வாக்குகளை பெற்றது என புள்ளிவிவர கணக்குகளை கேட்டிருக்கிறார். மேலும், வார்டுக்குள் எந்தெந்த பகுதிகள் வருகின்றன என்பதையும் அமைச்சர் செந்தில்பாலாஜி கேட்டிருக்கிறார்.
உதயசூரியன் சின்னம்
இதற்கு ஒரு சிலர் மட்டுமே பதில் அளித்ததாகவும் பெரும்பாலானோர் புள்ளி விவர கணக்குகள் தெரியாமல் திணறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து சிரித்த முகத்துடன் அவர்களை வழியனுப்பி வைத்த அமைச்சர் செந்தில்பாலாஜி, உதயசூரியன் தான் வேட்பாளர் என்பதை மனதில் வைத்து தேர்தல் பணியாற்றுங்கள், நிச்சயம் உரிய அங்கீகாரம் கிடைக்கச் செய்வேன் என உறுதியளித்தாராம்.
அமைச்சர் செந்தில்பாலாஜி
அமைச்சர் செந்தில்பாலாஜியை பொறுத்தவரை கரூர் மற்றும் கோவை மாவட்டத்தில்க் வார்டு வாரியாக எத்தனை வாக்காளர்கள் உள்ளனர் என்ற விவரத்தை விரல் நுனியில் வைத்திருக்கக் கூடியவர். இதுமட்டுமல்லாமல் தேர்தல் பணிக்கு என்றே ஸ்பெஷல் வியூகமும் வகுத்து அதை செயல்படுத்தக் கூடியவர் என்பது கவனிக்கத்தக்கது.