தொடர்ந்து உயரும் பெட்ரோல் விலை.. ரூ100ஐ தாண்டிய டீசல்.. அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்
கரூர்: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், கரூரில் பெட்ரோல் விலை 105 ரூபாயையும் டீசல் விலை 101 ரூபாயையும் தாண்டியுள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பெட்ரோல், டீசல் பயன்பாடு பெரும் அளவு குறைந்தது.
அதேநேரம் வேக்சின் பணிகள் தொடங்கப்பட்ட பிறகு, கொரோனா பாதிப்பு மிக வேகமாகக் கட்டுக்குள் வரத் தொடங்கியது. இதனால் பல்வேறு நாடுகளிலும் இயல்பு நிலை திரும்பி வருகிறது.

கச்சா எண்ணெய் விலை
எதிர்பார்த்ததைக் காட்டிலும் மிக வேகமாக இயல்பு நிலை திரும்பி வருவதால், பெட்ரோல், டீசல் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல், டீசல் விலையும் தொடர்ந்து மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் பெட்ரோ, டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

பெட்ரோல் விலை
பெட்ரோலை பொறுத்தவரை பெரும்பாலான மாநிலங்களில் கடந்த சில வாரங்களுக்கு முன்னரே பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்துவிட்டது. தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் பெட்ரோல் மீதான மாநில அரசின் வரி குறைக்கப்பட்டதால் அவை 100 ரூபாய்க்கு கீழ் இருந்தது. ஆனால், கச்சா எண்ணெய் தொடர்ந்து உயர்ந்து வருவதால், தமிழ்நாட்டிலும் பெட்ரோல் விலை மீண்டும் 100ஐ கடந்தது.

சதமடித்த டீசல்
தற்போது கரூரில் பெட்ரோல் விலை ரூ 105.09க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல டீசல் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கரூரில் கடந்த 23ஆம் தேதி டீசல் விலை முதல் முறையாகச் சதம் அடித்தது. கரூரில் டீசல் விலை ரூ 100ஐ கடந்தது இதுவே முதல்முறையாகும். அதன் பிறகும் கூட டீசல் விலை தொடர்ந்து உயர்ந்தே வருகிறது.

ரூ 101ஐ தாண்டிய டீசல்
நேற்றைய தினம் டீசல் ரூ.100.90க்கு விற்பனையானது. இந்தச் சூழலில் டீசல் விலை இன்று மேலும் உயர்ந்து 101.18 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பொருட்களை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதில் அதிக செலவாகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications