செந்தில் பாலாஜியின் அடுத்த இலக்கு இதுதான்.. தாண்டி ஒண்ணுமே போகாது.. மாஜி அமைச்சர் தங்கமணி ஆரூடம்!
கரூர் : அமைச்சர் செந்தில் பாலாஜியின் அடுத்த இலக்கு முதல்வர் பதவி தான் என்றும், செந்தில் பாலாஜி அடுத்ததாக போக உள்ள கட்சி பாஜக தான் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி கடுமையாகப் பேசியுள்ளார். செந்தில் பாலாஜியை தாண்டி உளவுத்துறை எதையும் தலைமைக்கு கொண்டு செல்வதில்லை என்றும் விமர்சித்துள்ளார் முன்னாள் அமைச்சர் தங்கமணி.
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வாகனத்தை வழிமறித்து தாக்கி கரூர் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் கடத்தப்பட்டதை கண்டிக்கும் வகையில், அதிமுக சார்பாக கண்டன பொதுக்கூட்டம் கரூரில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்று திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசினர்.

திமுகவுக்கு எதிராக
கடந்த சில நாட்களுக்கு முன்பு கரூர் மாவட்ட அதிமுக அவைத்தலைவரும், மாவட்ட ஊராட்சி கவுன்சிலருமான திருவிக, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் காரில் சென்றபோது மர்ம நபர்களால் கடத்தப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அதிமுக மாவட்ட ஐடி விங் இணைச்செயலாளர் சிவராஜ் கடத்தப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டு மீட்கப்பட்டார். மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலில் தாங்கள் வெற்றி பெறுவதாக செந்தில் பாலாஜியின் ஆட்கள் தான் கவுன்சிலரை கடத்தியதாக மாஜி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம்சாட்டினார்.

முன்னாள் அமைச்சர்கள்
இந்நிலையில், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாகக்கூறி திமுக அரசைக் கண்டித்து கரூரில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அந்தவகையில் கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் திமுக அரசைக் கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

தொண்டர்களை காக்கும் தலைவர்
இந்த கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய தங்கமணி, "அதிமுக தொண்டர்கள் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் அவர்கள் கழகமே கோவில் என்று இருந்து வருகின்றனர். தொண்டர்களுக்காகவே உள்ள இயக்கம் அதிமுக. அதனால் தான் யாரும் கூறுவதற்கு முன்பு கரூரில் கண்டன பொதுக் கூட்டத்தை அறிவித்தார் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார். தொண்டர்களைப் பாதுகாக்கும் தலைவர் ஈபிஎஸ் தான் எனத் தெரிவித்தார்.

கரூர் தனி மாநிலம்
மேலும் பேசிய அவர், "கரூர் ஒரு தனி மாநிலமாக உள்ளது. ஏனென்றால் இங்குள்ள அதிகாரிகள் தனி அரசாங்கம் நடத்தி வருகிறார்கள். அதனால் தான் கரூரில் அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டு உள்ளது. கரூரில் ஒவ்வொரு அதிமுக தொண்டர்கள் மீதும் தொடர்ந்து வழக்கு போட்டுக்கொண்டே இருக்கின்றனர். எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வருவார். தவறு செய்யும் அதிகாரிகள் எங்கு இருந்தாலும் விடமாட்டோம்." என்றார்.

செந்தில் பாலாஜி இலக்கு
மேலும் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, "செந்தில் பாலாஜி அடுத்ததாக போக உள்ள கட்சி பாஜக தான். செந்தில் பாலாஜியின் நடிப்பை ஜெயலலிதா புரிந்து கொள்ளவே காலதாமதம் ஆனது. செந்தில் பாலாஜியின் அடுத்த திட்டமே முதலமைச்சர் ஆவது தான். கரூரில் முதல்வரின் உளவுத்துறை சரியாக செயல்படவில்லை. இங்கு செந்தில் பாலாஜியை தாண்டி உளவுத்துறை எதையும் தலைமைக்கு கொண்டு செல்வதில்லை.

தனியாருக்கு கொடுக்க
தமிழகத்தில் எப்போது திமுக ஆட்சிக்கு வந்தாலும் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்காது அது போல தான் தற்போதும் உள்ளது. திமுக எப்போது ஆட்சி வந்தாலும் குடும்பம் தான் ஆட்சி நடத்தும். இன்றைக்கு மின்சாரத் துறையில் புதிய ஊழலுக்கு வழிவகை செய்து கொண்டு உள்ளனர். சூரிய ஒளி மூலம் மின்சாரம் கொடுக்கும் திட்டம் கொண்டு வந்து தனியாருக்கு கொடுக்க முயற்சி செய்து வருகின்றனர்" எனக் குற்றம்சாட்டிப் பேசினார்.












Click it and Unblock the Notifications