கொடுமை.. சிறுமியை மது குடிக்க வற்புறுத்திய 6 வாலிபர்கள்.. தூக்கிய போலீஸ்.. இருவருக்கு வலைவீச்சு!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே 10 வயது சிறுமிக்கு மது ஊற்றி கொடுத்து குடிக்க வைத்த 6 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
மது என்னும் அரக்கனால் அவதிப்படும் குடும்பங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொலை, கொள்ளை, விபத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பவங்களில் மதுவின் பங்கு பெருமளவு உள்ளது.
மது அருந்துவது கவுரவ அடையாளம்
மது அருந்துவது கேவலம் என்ற நிலை மாறி கவுரவ அடையாளமாக மாறி வருகிறது. இதனால் பல இளைஞர்கள் மது என்னும் மாய வலையில் சிக்கி சீரழிந்து வருகிறார்கள். இவ்வாறு மது குடித்து சீரழிந்து வரும் இளைஞர்கள், அவர்கள் கெட்டது போதாதென்று, மற்றவர்களையும் இதில் ஈடுபடுத்த முயல்வதும், என்ன செய்வதென்று தெரியாமல் சில விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவதையும் வாடிக்கையாக கொண்டு வருகின்றனர்.
வைரலான வீடியோவால் அதிர்ச்சி
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பெட்டமுகிளாலம் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி, மது குடிப்பது போலவும், புகைப் பிடிப்பது போன்றும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் கடந்த மாதம் வைரலாகி பரவியது. சிறுமியின் இந்த செயல், சமூக ஆர்வலர்களை மட்டுமின்றி, பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், ஆதங்கத்தையும் ஏற்படுத்தியது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, சிறுமிக்கு வாலிபர்கள் சிலர் மதுவை ஊற்றி கொடுத்து, புகைப்பிடிக்க வைத்ததும் தெரிய வந்துள்ளது.
இளைஞர்கள் 6 பேர் கைது
இது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவகாந்தி, தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் அளித்தார்.அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், சிறுமிக்கு மது ஊற்றி கொடுத்து, புகைப்பிடிக்க வைத்ததாக அதே பகுதியைச் சேர்ந்த சங்கையா, -குமார், ரமேஷ், சிவராஜ், ருத்ரப்பா, அழகப்பன் ஆகிய 6 இளைஞர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு ஓசூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
பின்னணி
மேலும் இதில் தொடர்புடைய சிவருத்ரப்பா, மல்லேஷ் ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சமூகத்திற்கு கேடு தரும் மதுவால் அரசுக்கு வருவாய் தர முடிகிறது. ஆனால் மதுவுக்கு அடிமையாகும் இளைஞர்களின் வாழ்க்கைக்கு கெடுதல் மட்டுமே தரமுடிகிறது. இந்த அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க, அரசுதான் முன்வர வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகும்.