'ஒரு கூட்டம்' கங்கனம் கட்டி திரியுது.. சசிகலாவா? - பிளான் இதான்.. போட்டு உடைத்த கே.பி.முனுசாமி!
கிருஷ்ணகிரி : அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் சசிகலாவின் முயற்சி தேற்கடிக்கப்படும் என அதிமுக முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் நிலவி வரும் ஓபிஎஸ், ஈபிஎஸ் மோதலுக்கு மத்தியில், சசிகலா தான் அதிமுகவுக்கு தலைமை ஏற்பேன் என பேசி வருகிறார்.
சசிகலா பேசி வருவது குறித்து செய்தியாளர்கள், ஈபிஎஸ் ஆதரவாளரான கேபி முனுசாமியிடம் கேள்வி எழுப்பிய நிலையில், ஒரு கூட்டம் தூண்டுதலின் பேரில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அந்த முயற்சி தேற்கடிக்கப்படும் என பதிலளித்தார் கேபி முனுசாமி.
அதிமுக வெல்லக்கூடாது என்பதற்காக சசிகலா செயல்பட்டு வருவதாக முனுசாமி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேரம் வரும்! காத்திருக்கும் ஓபிஎஸ்! இனி எல்லாம் சுபமே! முனுசாமி ஊரிலிருந்து கிடைத்த புது தெம்பு!
அதிமுக ஆர்ப்பாட்டம்
தமிழக அரசு மின்சார கட்டணத்தை உயர்த்தியதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் போராட்டம் நடைபெறும் என அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி இன்று ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. கிருஷ்ணகிரியில் திமுக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
அதான் எடப்பாடி கேட்டார்
அதிமுகவின் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி அவர்கள் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்: அப்போது திமுக எம்பி ஆ.ராசா குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஆ.ராசாவின் பேச்சு பிறரின் மனதை புன்படுத்தும்படியாகவும், பிறரின் உரிமையை பறிக்கும் வகையில் உள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஆ.ராசாவின் தலைவர் ஸ்டாலின் கண்டிக்காததால் தான் ஈபிஎஸ் ஆ.ராசாவின் பேச்சு ஸ்டாலின் குடும்பத்திற்கும் பொருந்துமா என கேள்வி எழுப்பி உள்ளார் எனத் தெரிவித்தார்.
நானும் செய்கிறேன்
திமுக அரசு கொண்டு வந்துள்ள பள்ளி குழந்தைகளுக்கான காலை சிற்றுண்டி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், குழந்தைகளுக்கு உணவு அளிப்பதை வரவேற்கலாம். ஆனால் ஆத்மார்த்தமாக அதனை செய்தாரா என்றால் இல்லை. அவர் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளால் தான் எங்களுக்கு வர வேண்டிய வாக்குகள் மாறி முதல்வரானார். ஆனால் மக்களை ஏமாற்றிவிட்டு நானும் செய்கிறேன் என சிலவற்றை அறிமுகப்படுத்தி இருக்கிறார் என விமர்சித்தார்.
தட்டு ஏந்த வைத்து
மேலும், எம்.ஜி.ஆர் மாணவர்களுக்கு சத்துணவு வழங்கியபோது கருணாநிதி, பிள்ளைகளை தட்டு ஏந்த வைத்துள்ளார் எம்.ஜி.ஆர் என்றார். தட்டு ஏந்த வைத்தார் எனக் கூறியவரின் மகனே எம்.ஜி.ஆர் திட்டத்தின்படி சிற்றுண்டி வழங்கி விளம்பரப்படுத்தி கொண்டுள்ளார். இப்போதும் நாங்கள் தான் அவர்களுக்கு உதவியாக உள்ளோம் எனத் தெரிவித்தார்.
சசிகலா பற்றி விமர்சனம்
அதிமுகவுக்கு தலைமை ஏற்பேன் என சசிகலா பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த முனுசாமி, ஜெயலலிதாவுக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சியினர் ஒன்றிணைந்து செயல்பட்டு வெற்றி பெற்றுவிடுவார்கள் என்கிற ஆதங்கத்தில் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது கங்கனம் கட்டிக்கொண்டுள்ள ஒரு கூட்டம் தூண்டுதலின் பேரில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்ற குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் முயற்சி தேற்கடிக்கப்படும் எனத் தெரிவித்தார்.