‘பல்டி’ அடிக்கும் தலைகள்.. முனுசாமி கோட்டையில் இறங்கிய தம்பிதுரை.. உச்சகட்ட குழப்பம்! என்ன நடக்குது?
கிருஷ்ணகிரி : சமீபத்தில் ஓபிஎஸ் அணியில் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள், மீண்டும் எடப்பாடி பழனிசாமி தரப்போடு நெருக்கம் காட்டி வருவதால், ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளதாம்.
அதிமுகவில் நிலவி வரும் ஓபிஎஸ், ஈபிஎஸ் பிளவுக்கு மத்தியில், அங்கிருந்து, இங்கு, இங்கிருந்து அங்கு என நிர்வாகிகள் அணி மாறி வருகின்றனர்.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், சமீபத்தில் தான் ஓபிஎஸ் அணியில் இணைந்த நிலையில், மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணியோரு நெருக்கம் காட்டி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓபிஎஸ் அணியில் மாவட்ட செயலாளராக இருப்பவர், ஈபிஎஸ் அணியில் இருப்பவர்களை அழைத்து பதவி தர திட்டமிடுவதாக, ஓபிஎஸ் அணியில் ஒரு தரப்பினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

தூண்டில்
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என இரண்டு அணிகளாகச் செயல்பட்டு வரும் நிலையில், இரண்டு அணிகளிலும் தங்கள் பக்கம் ஆதரவாளர்களை இழுக்கும் படலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அரசியல் ரீதியாக சாதகமான விளைவுகளை அடைவதற்காக, அதிமுகவினர் பலரும் இங்கிருந்து அங்கு, அங்கிருந்து இங்கு என அணி தாவி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி தரப்பு நிர்வாகிகள் மீதான அதிருப்தியால், பலரும் ஓபிஎஸ் அணிக்குத் தாவினர். அவர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவி வருவது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓபிஎஸ் அணியில்
எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமியின் மாவட்டமான கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். சென்னையில் நட்சத்திர ஹோட்டலில், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி முன்னிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான அதிமுக நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து அவரது அணியில் இணைந்தனர்.

ஈபிஎஸ் டு ஓபிஎஸ்
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சேர்மன் வெங்கடாசலம், தேவராஜ், தங்கராஜ், வெற்றிவேல், டாக்டர் ஜான் திமோத்தி, ராஜேந்திர கவடு உள்ளிட்டோர் ஓபிஎஸ் அணியில் இணைந்தனர். அதன் பிறகு, முன்னாள் எம்எல்ஏ கோவிந்தராஜ், கே.இ.கிருஷ்ணமூர்த்தி மற்றும் வேப்பனஹள்ளி வேட்பாளராக நிறுத்தப்பட்ட மது (எ) ஹேம்நாத், முன்னாள் சேர்மன் கோவிந்தராஜ் ஆகியோர் இணைந்தனர். ஹேம்நாத்தின் மனைவி லாவண்யா ஹேம்நாத் தற்போது சூளகிரி ஒன்றிய சேர்மேனாக இருந்து வருகிறார்.

தம்பிதுரையுடன் நெருக்கம்
இந்நிலையில், ஓபிஎஸ் அணியில் இணைந்த ஹேம்நாத் சமீபத்தில் திடீரென எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தம்பிதுரையை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்த ஹேம்நாத், தம்பிதுரையைச் சந்தித்தது கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தரப்போடு நெருக்கம் காட்டி வருவதால் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தாக்கியவருக்கு பதவி?
இதேபோல, ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வந்தபோது காவேரிப்பட்டினத்தில் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள். அவர்கள் மீது புகார் அளித்து அவர்களை தாக்க முயன்றார் எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்த ஆறுமுகம். அந்த ஆறுமுகத்தை தற்போது ஒன்றிய செயலாளர் பதவிக்கு கோவிந்தராஜ் பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ஓபிஎஸ் அணியில் இருப்பவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பதவி பதவி
கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளராக ஓ.பன்னீர்செல்வத்தால் நியமிக்கப்பட்ட கோவிந்தராஜ், தனக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே பதவி அளிக்க முயன்று வருவதாகவும், ஓபிஎஸ் அணியிலேயே அதிருப்தி வீசத் தொடங்கி இருக்கிறது. மேலும், கேபி முனுசாமி ஆதரவாளர்களை தங்கள் பக்கம் இழுக்க, பதவி தருவதாகச் சொல்லியே அழைக்கிறாம் கோவிந்தராஜ். இதனால், முன்பிருந்தே ஓபிஎஸ் ஆதரவாளர்களாக இருப்பவர்கள் கடுமையாக அப்செட் ஆகியுள்ளனர்.

கிருஷ்ணகிரி அப்செட்
தமிழகம் முழுவதும் இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற ரீதியில் மாவட்ட செயலாளர்களை நியமித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம். ஆனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் ஆறு தொகுதிக்கு ஒரே ஒரு மாவட்டச் செயலாளராக கோவிந்தராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால், மாவட்டத்தை பிரித்து புதிய மாவட்ட செயலாளர்கள் எப்போது அறிவிக்கப்படுவார்கள் என கிருஷ்ணகிரி மாவட்ட ஓபிஎஸ் அணியினர் கேள்வி எழுப்புகின்றனர்.

கூண்டோடு கல்தா?
எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து ஓபிஎஸ் அணிக்குச் சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்கும் பணிகளில் தம்பிதுரை ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. தற்போது முக்கிய நிர்வாகிகள் தம்பிதுரையைச் சந்தித்து வருவதால், கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக கூண்டோடு மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணியின் கைக்குச் சென்றுவிடுமா என்ற குழப்பமும் தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓபிஎஸ் அணியிலேயே இரண்டு பிளவுகள் ஏற்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications