எடப்பாடியை உள்ளே விட்டீங்க.. கெட்டீங்க.. எச்சரிக்கும் பெங்களூர் புகழேந்தி
கிருஷ்ணகிரி: அதிமுக அலுவலகத்திற்குள் செல்ல தமிழக அரசு யாரையும் அனுமதிக்க கூடாது என்று ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே மோதல் ஏற்பட்டு தனித்தனியாக செயல்பட்டு வருகிறார்கள். கடந்த ஜூலை மாதம் 11தேதி அதிமுக தலைமை கழகம் முன்பு இருதரப்பு ஆதரவாளர்களும் மோதலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அதிமுக தலைமை கழகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி நீதிமன்றம் சென்று அந்த சீலை அகற்றினார். இருந்தும் தலைமை கழகத்துக்குள் எடப்பாடி பழனிசாமியும், அவரது ஆதரவாளர்களும் செல்ல முடியாத நிலை இருந்தது.
முதல்வர் ஸ்டாலின் குடும்பம் பற்றி அவதூறு.. அதிமுக ஐடி விங் நிர்வாகியை ஆபீஸுக்கே போய் தூக்கிய போலீஸ்!
அதிமுக அலுவலகம்
இந்த நிலையில் ஜூலை 11தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று சென்னை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் அந்த பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானது செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அதிமுக நிர்வாக செயல்பாடுகளில் இபிஎஸ் கைகள் ஓங்கியுள்ளது. இதனை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் எடப்பாடி பழனிசாமி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகத்துக்கு நாளை செல்ல உள்ளார்.
அதிமுக அறிக்கை
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நாளை காலை 10 மணியளவில், தலைமைக் கழகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கை ஓங்கும் இபிஎஸ்
அதிமுக தலைமை கழகம் முன் வன்முறை ஏற்பட்டதால் எடப்பாடி பழனிசாமியும், அவரது ஆதரவாளர்களும் இதுவரை சிபிசிஐடி விசாரணைக்காக காத்திருந்தனர். இன்று சிபிசிஐடி போலீசார் 6 மணி நேரம் வரை விசாரணை மேற்கொண்டனர். இதனால் தலைமை கழகம் வருவதற்கான அனைத்து தடைகளும் நீங்கி உள்ளது. இது இபிஎஸ் ஆதரவாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஓபிஎஸ்-க்கு பின்னடைவு
ஆனால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கடும் அதிர்ச்சியில் உள்ளது. தலைமை கழகத்தில் எடப்பாடி பழனிசாமி நிர்வாக செயல்பாடுகளை மேற்கொள்ளும் பட்சத்தில் தேர்தல் ஆணையம் அவருக்கு சாதகமாக முடிவு எடுக்கும் என்பதால் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு கடும் பின்னடைவாக கருதப்படுகிறது.
புகழேந்தி பேட்டி
இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்து ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கூறுகையில், அதிமுக அலுவலகத்தில் ஏற்பட்ட மோதலுக்கு சிபிஐ விசாரணை கேட்பதா? இது என்ன கொடநாடு பிரச்சனையா? என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, அதிமுக அலுவலகம் 30 நாட்கள் வரை திறக்க வேண்டாம் என்ற தீர்ப்பையடுத்து, இதுவரை அலுவலகம் செல்லாத இபிஎஸ், சிவி சண்முகம் 47 நாட்கள் கழித்து நாளை செல்வது ஏன்?
டிஜிபி அனுமதிக்கக் கூடாது
நீதிமன்றம் அதிமுக அலுவலகத்திற்கு யாரையும் செல்ல வேண்டாமென தீர்ப்பில் குறிப்பிடவில்லை. நீதிமன்றம் சாவியை வழங்கியதே இபிஎஸ்-ஐ வாட்ச்மேன் வேலையை பார்க்கத்தான் என நினைக்கிறேன். சிபிசிஐடி விசாரணை தொடங்கிய உடனே, அதிமுக அலுவலகம் செல்ல நினைப்பதால், டிஜிபி யாரையும் அனுமதிக்கக் கூடாது.
சட்டம் - ஒழுங்கு பிரச்னை
அதிமுக அலுவலகம் முன் நடைபெற்ற மோதல் தொடர்பாக இரு தரப்பினரும் புகார் அளித்திருப்பதால், அவர்கள் அலுவலகம் சென்றால் தொண்டர்கள் சூழ்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழல் உருவாகும். இதனால் சட்டம் - ஒழங்கை காக்க வேண்டுமென்றால் தமிழக முதல்வர், அதிமுக அலுவலகத்திற்குள் செல்ல யாரையும் அனுமதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.