லஞ்ச ஒழிப்பு சோதனை.. ஓசூரில் பெண் அதிகாரி வீட்டில் கட்டுக்கட்டாக ரூ.2.27 கோடி பணம் சிக்கியது!
கிருஷ்ணகிரி: ஓசூரில் தொழில்நுட்பக்கல்வி பெண் அதிகாரி வீட்டில் லஞ்சஒழிப்பு போலீஸ் நடத்திய சோதனையில் ரூ.2.27 கோடி சிக்கியது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர் ஷோபனா (வயது 57)
வேலூர் தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ள மண்டல தொழில்நுட்ப கல்வி அலுவலகத்தில் செயற்பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.

டெண்டர் விடும் பணி
பாலிடெக்னிக் வளாகத்திலேயே தங்கி உள்ளார். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், தர்மபுரி ஆகிய 6 மாவட்டங்களில் பாலிடெக்னிக், என்ஜினியரிங் கல்லூரிகளில் கட்டுமானம் உள்ளிட்ட பணிகள் தொடர்பான டெண்டர் விடுவது, நிதி ஒதுக்கீடு செய்வது போன்ற பணிகளை ஷோபனா செய்து வருகிறார்.

அதிரடி சோதனை
செயற்பொறியாளர் ஷோபனா மீது ஏராளமான லஞ்ச புகார்கள் உள்ளன. அவர் லஞ்சம் வாங்குவதாக லஞ்சஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. (பொறுப்பு) கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அவரை தீவிரமாக கண்காணித்தனர். வேலூர் ஜெயில் அருகே அணைக்கட்டு சாலையில் உள்ள ஒரு ஓட்டல் அருகே அவரது காரை போலீசார் அதிரடியாக சோதனையிட்டனர்.

ரூ.2.27 கோடி சிக்கியது
அதில் ரூ.5 லட்சம் பணம் இருந்தது. அதற்கான ஆவணம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் தங்கி இருந்த அறையில் போலீசார் சோதனை நடத்தியபோது அங்கேயே ரூ.20 லட்சம் கைப்பற்றப்பட்டது. அங்கிருந்த ரூ.3.92 லட்சத்திற்கான காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஷோபனாவின் வீட்டுக்கு சென்ற லஞ்சஒழிப்பு போலீசார் அங்கு சோதனை நடத்தியபோது கட்டுக்கட்டாக பணம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதாவது ரூ.2.27 கோடி ரொக்கப்பணம் கட்டுக்கட்டாக சிக்கியது.

பொதுமக்கள் அதிர்ச்சி
மேலும், 38 சவரன் தங்கம், முக்கிய ஆவணங்கள் ஆகியவை சிக்கின. ஷோபனாவை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து சோதனை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அரசு ஊழியர் வீட்டில் கட்டுக்கட்டாக லஞ்ச பணம் கைப்பற்றப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications